Apr 7, 2009

TNTJ வின் மாநிலப் பொதுக்குழு தி.மு.க விற்கு தார்மீக ஆதரவு





05 :04:2009 அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.


கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு அளிக்கும் ஆணையம் அமைத்ததற்காக அதிமுக கூட்டணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஜெயலலிதா அமைத்த ஆணையம் பயனற்றுப் போனது.


திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் தனி இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு வீரியமிக்க போராட்டங்களை நடத்தியது. இதன் விளைவாக திமுக அரசு முஸ்லிம்களுக்கு மூனறை சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இது போதுமானதாக இல்லாவிட்டாலும் இந்த அளவிற்காவது கிடைத்ததே என்பதற்காக எதிர்வரும் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது என்று முடிவு செய்து முதல்வரிடம் எழுத்து மூலமான ஆதரவை டிஎன்டிஜே தெரிவித்தது.

ஆனாலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏராளமான வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதை எதிர்த்தும் டிஎன்டிஜே பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆரம்பத்தில் இதை அலட்சியம் செய்த முதல்வர் முஸ்லிம் மக்களின் கடும் அதிர்ப்தியைக் கண்ட பின் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டு சரி செய்வதாக உறுதியளித்தார். இதன் பின்னர் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளிலும் உயர் கல்வியிலும் மூனறை சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த ஆறு மாதங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையையும் முதல்வர் கண்டு கொள்ளவில்லை. எனவே இடஒதுக்கீடு சட்டம் அமுலுக்கு வந்த பின் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாத காரணத்தால் தீவிரமான ஆதரவை திமுகவிற்கு அளிக்க இயலாது. அதே சமயம் இடஒதுக்கீட்டை தற்சமயம் நடைமுறைப்படுத்தியதால் திமுகவிற்கு தார்மீக ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கிறோம்.


1. கடந்த காலத்தில் செய்யப்பட்ட அநீதியைச் சரி செய்வதாக காலக்கெடுவுடன் எழுத்து மூலமான உறுதிமொழி அளித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லறைப் பிரச்சனைகளுக்காக முஸலிம்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கினால் திமுகவை தீவிரமாக ஆதரிப்பது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.


2. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக தெரிவித்தது. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் முழுமையாக இருந்தும், இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சிகள் துணைக்கு நின்றும் முஸ்லிம்களுக்கு இடுஒதுக்கீடு அளிக்க மறுத்து முஸ்லிம்களை ஏமாற்றியது. அமெரிக்கா உடன் அடிமை சாசனம் செய்ய தீவிர முயற்சி செய்த மத்திய அரசு முஸ்லிம்களை வஞ்சித்து விட்டது. இப்போதய தேர்தல் அறிக்கையில் கூட முஸ்லிம்களின் இடஒதுக்கீடு குறித்து எதையும் குறிப்பிடவில்லை. அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தம், இஸ்ரேலுடன் இராணுவ உறவு, கலவரத் தடுப்பு காவல்படை அமைப்பதாக அளித்த வாக்கை மீறியது. பாபர் மசூதிக்கு நியாயம் வழங்க மறுத்தது என்று அடுக்கடுக்கான அநியாயங்களைச் செய்து வந்ததுடன் கடைசியாக இடஒதுக்கீடு விஷயத்திலும் அநீதி செய்துள்ளது. எனவே வரும் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 15 தொகுதிகளிலும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.


3. விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் முஸ்லிம் செல்வந்தர்களையும் வணிகர்களையும் நில உரிமையாளர்களையும் மிரட்டி அராஜகம் செய்து வருவதாலும் அவர்களை திருமாவளவன் அடக்கி வைக்காத காரணத்தாலும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலை சிறுத்தைகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே விடுதலைச் சிறுத்தைகளை ஆதரிப்பதில்லை என்றும் இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.


4. அதிமுகவைப் பொறுத்தவைர முஸ்லிம்களின் எதிரியாக பார்க்கப்பட்டாலும் இடஒதுக்கீடு ஆணையம் அமைத்ததால் அதிமுகவிற்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர். திமுகவின் கோட்டையான சென்னையில் அதிக இடங்களை அதிமுக பெற்றதற்கும் பலமான எதிர்க்கட்சியாக அமைந்ததற்கும் முஸ்லிம்களே காரணம். இந்த விசுவாசம் இல்லாமல் முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வகையில் பயங்கரவாதி மோடியை அழைத்து விருந்தளித்து முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லாமல் சொன்ன ஜெயலலிதாவையும் அவரது கூட்டணியையும் ஆதரிப்பதில்லை.


5. பமாக தொடர்ந்து முஸ்லிம் விரோதியாகச் செயல்படுவதாலும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதிப் பட்டம் சுமத்தியதாலும் கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட தராத காரணத்தினாலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் உள் வேளை செய்த காரணத்தினாலும் பமகாவை ஆதரிப்பதில்லை என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


6. விஜயகாந்தைப் பொறுத்த வரை அவர் ஆளும் கட்சியாகவோ எதிர்க் கட்சியாகவோ இருக்கவில்லை. அவரை எடைபோட அவர் நடித்த சினிமாக்கள் தான் உள்ளன. அவரது சினிமாக்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கின்ற போக்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதால் அவரையும் அவரது கட்சியையும் ஆதரிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.


7. புதுவையில் மட்டும் புதுவை மாநில அரசு இடஒதுக்கீட்டிற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாலும் ஆணையம் அமைத்ததாலும் விரைவில் இடஒதுக்கீட்டை அளிப்பதாக முதல்வர் நேரடியாக புதுவை நிர்வாகிகளிடம் வந்து வாக்குறுதி அளித்ததாலும் புதுவையில் மட்டும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதாக இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


8. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


திமுக போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸ்-அதிமுக அல்லது காங்கிரஸ்-பாமக அல்லது காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ்-மதிமுக, அல்லது விடுதலைசிறுத்தைகள்-பாமக போட்டியிடும் போது இரண்டு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் யாரையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும். இருவரில் ஒருவரை விட மற்றவர் முஸ்லிம்களுக்குப் பயன்படுவார் என்று மாவட்ட நிர்வாகம் தக்ககாரணங்களுடன் தெரிவித்தால் மாநில நிர்வாகம் பரிசீலித்து அதனை ஏற்றுக் கொள்ளும்.

அல்-ஐன்னில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

அல்-ஐன்னில் 27-03-2009. வெள்ளிக்கிழமை மாலை 7. 15 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்-ஐன் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்.உலக அளவில் தமிழ் பேசும் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந் நிகழ்ச்சி தமிழகத்தில் மட்டுமின்றி வளைகுடா பகுதிகளிலும் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மனித நேயத்தை வளர்த்திடவும், இஸ்லாம் குறித்து தவறாக விளங்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விமர்சிப்பவர்ககளுக்கு இஸ்லாம் பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்தவும் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகின்றது.








மாலை 7. 15க்கு அல்-ஐன்னில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது ஸலீம் அவர்களின் துவக்க உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அதனை தொடர்ந்து டி.என்.டி.ஜே யின் அனைத்து மண்டல அமீரக ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஹாமின் இபுராஹீம் அவர்களின் இஸ்லாம் குறித்த அறிமுக உரையுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியது.

நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பிற மதசகோதரர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்வமாய் தங்களின் கேள்விகளை கேட்டார்கள் தீவிரவாத செயல்களில் உலக அளவில் ஏன் முஸ்லீம்கள் ஈடுபடுகின்றார்கள் ? மறுமைவாழ்வு எனும் பயத்தை ஏற்படுத்தித்தான் கடவுள் நம்பிக்கையை வளர்க்க வேண்டுமா? என்ற முஸ்லீம் அல்லாத சகோதரர்களின் கேள்விகளுக்கு சகோதரர் ஹாமின்இபுராஹீம் அவர்கள் மிகத்தெளிவாக பதிலுரைத்தார்கள். இறுதியாக வளூத்தூர் முஹம்மது ஸலீம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழச்சி நிறைவடைந்தது.

நிகழ்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அல்-ஐன் கிளை தலைவர் முஹம்மது ஸலீம் தலைமையில் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே........

Mar 24, 2009

சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு!

உறக்கம் தோய்ந்த நகர்வோடு எம் வாழ்க்கை வண்டி நடை போட, அதோகதியாய் ஆனது நம் எதிர்காலம்.

நோக்கமற்ற பாய்ச்சலால் ஊனப்பட்டது - நம் சமூகம்தான்!

இலக்கு மறந்த நம் வாழ்க்கையின் பக்கங்களில் பதிவானது ஒன்றுமில்லை, அந்தோ ஒரு இளைய தலைமுறையினர் வெறுமையை சுவாசிக்கின்றனர்!

கால ஓட்டத்தில் ஒதுங்கிய சருகுகளாய் நம் வரலாறு ஒதுக்கப்பட வேண்டாம். எதிர்கால சமூகத்தின் தேடல்களாய் பாதுகாக்கப்படட்டும்.

சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு நகர்த்துதலிலும் அர்ததம் இருக்கும். அதனால் தான் வெற்றியை எய்த முடிகின்றது. தோல்வி என்பது முயற்சியின் முடிவாக இருக்கட்டும்.

ஒரு உயரிய சமுதாய உருவாக்கத்தில் எனது பங்கும் கண்டிப்பாக இருக்கட்டும். நான் சாதித்தது எதுவாகவும் இருக்கலாம், ஆனால் என்னால் ஆற்றிய பங்கு எத்தனை சதவிகிதம்? என்பதே முக்கியம்.

கல்வி, ஆன்மீகம், கட்டுப்பாடு, ஒழுக்கம், இலக்கு மற்றும் முயற்சி ஒரு மனிதனின் அத்தியவசியத் தேவை!

என்னால் என் சமுதாயத்திற்காக தினமொரு பங்களிப்பை என்னால் செய்ய முடியும், இலட்சக்கணக்கில் ஒன்றும் எமது சமூகம் எம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை மாறாக சின்னச் சின்ன உதவிகளுக்காய் அவர்களது எதிர்காலம் வேண்டி நிற்கின்றது.

எம்மால் எமது எதிகால சமுதாயத்திற்காக செய்ய முடியுமான சில உதவிகள்:

தினமொரு துஆ (பிரார்த்தனை), சின்னச் சின்ன பொருளுதவி, நிலையான தர்மங்களில் பங்கு கொள்ளல், அறிந்த விடயங்களை பொருத்தமான முறையில் கற்றுக் கொடுத்தல், படித்த மாணவர்களுக்கு முகாமைத்துவப் பயற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், ஈமானிய வளர்ச்சிக்கான விடயங்களில் பங்கு கொள்ளல், பெண்களது ஹிஜாப் வளர்ச்சிக்கான முயற்சிகளில் கவணம் செலுத்துதல், தனிமனித உருவாக்கம் மற்றும் இஸ்லாமியக் குடும்ப உருவாக்கங்களில் ஈடுபடல்… போன்ற இன்னோரன்ன துறைகள் பரவிக் கிடக்கின்றன.

இவைகளில் நம்மால் முடியுமான குறைந்த பட்ச முயற்சியுடன் கூடிய பங்களிப்பு கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அதுவும் இஸ்லாமிய வரையறைகளுக்கு உற்பட்ட வகையில் இருப்பதையும் நாம் கவணத்திற் கொள்ள வேண்டும். மேற்கத்தேய நாடுகளில் அவர்களது சமூக மேம்பாட்டிற்கான மற்றும் முன்னேற்றத்திற்கான அனைத்து வகையான துறைகளிலும் நன்றாக திட்டமிட்டு செயற்படுகிறார்கள். ஆனால் வரையறை அற்ற செயற்பாடுகளால் அங்கு வளர்ச்சிக்கு ஏற்ப வீழ்ச்சியும் படு பயங்கரமாக தோற்றமெடுப்பதை அவர்களது நாட்டு நடப்புக்கள் எமக்கு தெறிவிக்கின்றன.

( قوله - صلى الله عليه وسلم -: (لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه

‘தனக்கு விரும்புகின்ற ஒன்றை தன் சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் ஒருவரும் (உண்மையான) விசுவாசியாக மாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளமை, நாம் மேலே கூறிய விடயங்களை மேலும் அழுத்தம் தருவதாக் தெறிகின்றது.

ஒரு சீரிய இஸ்லாமிய சமூக வளர்ச்சிக்கு முடியுமான பங்களிப்பை நல்கியவர்களில் நம்மையும் வல்ல றஹ்மான் ஆக்கியருளட்டுமாக!

thanks to; suvanthendral

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள்

பள்ளிவாசல்கள் கட்டுவதின் சிறப்பு!

உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது ‘நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி), ஆதாரம் : புகாரி

தும்மினால் கூறவேண்டியவைகள்!

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

நபி (ஸல்) கட்டளையிட்ட ஏழு விஷயங்கள்: -

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள்.

எங்களுக்குக் கட்டளையிட்ட ஏழு விஷயங்கள் இவைதாம்:

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மிய(வர் ‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று கூறினால் அ)வருக்கு (’அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக’ என்று) மறுமொழி கூறுவது.
4. விருந்து அழைப்பை ஏற்றுக் கொள்வது.
5. சலாமுக்கு (முகமனுக்கு) பதில் உரைப்பது
6. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது.
7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதாம்:

1. ‘தங்கமோதிரம் அணிவது’ அல்லது ‘தங்க வளையம் அணிவது’ 2. சாதாரணப் பட்டு அணிவது. 3. அலங்காரப் பட்டு அணிவது. 4. மென்பட்டு அணிவது 5. மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது. (ஆதாரம் : புகாரி)

பாவம் எனும் வேலியைச் சுற்றி மேயாதீர்கள்!

“ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேம்ப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :நுஃமான் இப்னு பஷீர்(ரலி), ஆதாரம் : புகாரி.

குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமான அத்தியாயம்!

“ஒருவர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (’நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே’) எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசி விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது’ என்றார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி), ஆதாரம் : புகாரி.

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்!

“மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ் தான் அதை அறிவான். மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி.

இறைவனைப் பார்த்ததாகவும் மறைவான விஷயங்கள் தமக்குத் தெரியும் என்றும் கூறுபவர் பொய்யரே!

ஆயிஷா(ரலி) அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கிறவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)’ என்றார்கள். அறிவிப்பவர் : மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்), ஆதாரம் : புகாரி.

நீங்கள் படுக்கைக்குச் சென்றால்…

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். காலையில் (எழும்போது) ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமர்த்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள். அறிவிப்பவர் :ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி), ஆதாரம் : புகாரி.

தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும் போது…

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸ்க்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) என்று பிரார்த்தித்து, அந்த உறவில் அத்தம்பதியருக்து விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.

Thanks To:Suvanathendral.

அமெரிக்க ஏகாதிபத்தியம் காகிதப்புலிதான்

கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான். இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?


ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' வெளியே தெரிந்த அளவிற்கு, சோமாலியா நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் பொதுமக்களின் கவனத்துக்கு வரவில்லை. இதற்குக் காரணம், அமெரிக்கா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனது படைகளை இறக்கி, அந்நாடுகளை ஆக்கிரமித்திருப்பதைப் போல் சோமாலியாவில் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக நடத்தவில்லை. மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள தனது பிராந்திய அடியாளான எத்தியோப்பியப் படைகளின் மூலம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. இதன் காரணமாக பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகளால் சோமாலியாவில் நடந்து வந்த இந்தப் போர், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் நடக்கும் அண்டை நாட்டுச் சண்டையாகப் புறக்கணிக்கப்பட்டது.


அமெரிக்கா, ஏழை நாடான சோமாலியா மீது தொடுத்த இந்த ஆக்கிரமிப்புப் போரை, தீவிரவாதத்துக்கு எதிரான போரின் மூன்றாவது போர் முனையாகக் குறிப்பிட்டு வந்தது. சோமாலியா மக்கள் கடுமையான பஞ்சத்துக்கு இடையிலும் போராடி, எத்தியோப்பியப் படைகளைத் தோற்கடித்து, இந்த மூன்றாவது போர் முனையில் அமெரிக்காவின் மூக்கை அறுத்திருக்கிறார்கள்.


•••


சோமாலியா, ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்கு முனையில் இந்தியப் பெருங்கடலையொட்டி அமைந்துள்ளது. மேலும், ‹யஸ் கால்வாயின் தென்பகுதி, ஏடன் வளைகுடாவையொட்டி சோமாலியா அமைந்திருப்பதாலும்; உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் ஏறத்தாழ 30 சதவீதம் இக்கடல் பகுதி வழியாகத்தான் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாலும் "பனிப்போர்' காலந்தொட்டே சோமாலியாவைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர மேல்நிலை வல்லரசுகள் முயன்று வந்தன.


அமெரிக்காவுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்திய ரசியாவிற்கும் இடையே பனிப்போர் நடந்து வந்த காலத்தில், அவை, சோமாலியாவையும் அதன் அண்டை நாடான எத்தியோப்பியாவையும் மோதவிட்டுப் பதிலிப் போரை நடத்தின. "ஓகாடேன் போர்'' என்றழைக்கப்பட்ட இப்பதிலிப் போரில், சோமாலியாவை அமெரிக்காவும், எத்தியோப்பியாவை ரசியாவும் ஆதரித்தன. இப்போரில் சோமாலியா மிகவும் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது.


இப்போரினையடுத்து, சோமாலியாவில் வசித்துவந்த இனக்குழுக்கள், அமெரிக்கா தயவுடன் அந்நாட்டை ஆண்டு வந்த அதிபர் சியாத் பார்ரேக்கு எதிராகக் கலகம் செய்தன. இந்த உள்நாட்டுக் கலகத்தால் அதிபர் சியாத் பார்ரே 1990களின் ஆரம்பத்தில் பதவியை விட்டு ஓடினான். அதிகாரத்தை யார் கைப்பற்றிக் கொள்வது என்ற போட்டி ஏற்பட்டதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்கா, ஐ.நா.வின் மூலம் உதவிநிவாரணம் என்ற பெயரில், ஏறத்தாழ 30,000 துருப்புகளை சோமாலியாவில் கொண்டு வந்து இறக்கியது. எனினும், சோமாலியா மக்களின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களின் காரணமாக, அமெரிக்கா 1995இல் தனது படைகளை சோமாலியாவில் இருந்து விலக்கிக்கொண்டது.


அதன்பிறகு சோமாலியா, ஏறத்தாழ பத்து ஆண்டுகள், தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் எனும் வகையில், யுத்தப் பிரபுக்களின் கைகளில் சிக்கிக் கொண்டது. யுத்தப் பிரபுக்களுக்கு இடையே அதிகாரத்துக்கு நடைபெற்றுவந்த நாய்ச்சண்டை, மற்றும் பஞ்சம், பட்டினிக்குள் சிக்கிக் கொண்டு, சோமாலியா சிதைந்து சின்னாபின்னமானது.


இந்நிலையில், சோமாலியாவைச் சேர்ந்த மிதவாத முஸ்லீம் அமைப்புகளும், தேசியவாத அமைப்புகளும் இணைந்து, ""இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில்'' என்ற அமைப்பை ஏற்படுத்தி, பதவிவெறி கொண்ட யுத்தப் பிரபுக்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கின. இவ்வமைப்பு, 2006ஆம் ஆண்டு, யுத்தபிரபுக்களை முற்றிலுமாகத் தோற்கடித்து, சோமாலியா நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இவ்வமைப்பின் கீழ் சிதறுண்டு கிடந்த நாடு ஒன்றுபடுத்தப்பட்டு, மைய அரசு ஏற்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பொருளாதாரக் கண்ணிகளும், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற மக்கள் நலன் சேர்ந்த உறுப்புகளும் தொடர்ந்து இயங்கும் வண்ணம் சோமாலியா புனரமைக்கப்பட்டது; ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே குறைந்த கட்டணத்தில் கைபேசி சேவை அளிக்கும் வண்ணம் சோமாலியாவில் ""பொருளாதார வளர்ச்சியும்'' ஏற்படத் தொடங்கியது. இதனைக் கண்டு அமெரிக்கக் கழுகுக்கும் மூக்கு வியர்க்கத் தொடங்கியது.


சோமாலியா மீது படையெடுக்க வேண்டும் என்றால், உலக நாடுகளின் முன் ஒரு காரணத்தை முன்வைக்க வேண்டும். அதற்காக ஒரு புளுகு மூட்டையைத் தயாரித்தது, அமெரிக்கா. சோமாலியாவை ஆளும் இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில், அல்காயிதாவுடன் தொடர்புடைய அமைப்பு என்றும்; 1998 ஆம் ஆண்டு நைரோபியிலும், தர்இஸ்லாமிலும் அமெரிக்கத் தூதரகங்களுக்குக் குண்டு வைத்த அல்காயிதா பயங்கரவாதிகளுக்கு, இஸ்லாமிய ஐக்கிய கவுன்சில் சோமாலியாவில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக ஒரு கோயபல்” பிரச்சாரத்தை நடத்தத் தொடங்கியது, அமெரிக்க அரசு.


"பனிப்போர்' காலத்தில், சோவியத் ரசியாவின் அடியாளாக இருந்த எத்தியோப்பியா, 2000இல், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியாக மாறியது. சோமாலியாவுக்கும், எத்தியோப்பியாவுக்கும் இடையே பல பத்தாண்டுகளாக இருந்துவரும் பகையைத் தனது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது, அமெரிக்கா. இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலால் தோற்கடிக்கப்பட்ட சோமாலியாவின் யுத்தப் பிரபுக்களின் தலைமையில் ஒரு பொம்மை அரசை நிறுவும் திட்டமும் அமெரிக்காவில் தயாரானது.


இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில் யுத்தப் பிரபுக்களோடு அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள முன் வந்து போரைத் தவிர்க்க முயன்றது. ஆனால், அமெரிக்காவோ, எத்தியோப்பியா எல்லையோரம் தலைமறைவாகத் திரிந்த சோமாலியாவின் யுத்தப் பிரபுக்களுக்கு சி.ஐ.ஏ.மூலம் இரகசியமான வழிகளில் ஆயுத உதவி அளித்து, போர் ஏற்பாடுகளை முடுக்கி விட்டது. அமெரிக்காவின் மத்தியப் படையணியின் தளபதி ஜான் அபிஸெசூத் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு நவம்பர் 2006இல் ""விஜயம்'' செய்தார். அதற்கு அடுத்த மாதம் எத்தியோப்பியப் படைகள், சோமாலியாவுக்குள் நுழைந்து, அமெரிக்காவின் ஆசையை நிறைவேற்றி வைத்தன.


"அல்காயிதா பயங்கரவாதிகளை அழித்தொழிப்பது'' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போரினால், கடந்த இரண்டே ஆண்டுகளுக்குள் 16,000க்கும் மேற்பட்ட சோமாலியா மக்கள் மாண்டு போனார்கள். ஒருகட்டத்தில், இராணுவத் தாக்குதல்களால் அன்றாடம் சாகும் பொதுமக்களின் எண்ணிக்கை, ஈராக்கைவிட சோமாலியாவில் அதிகமானது.


எத்தியோப்பியப் படைகளுக்குத் துணையாக, சோமாலியாவையொட்டிய சர்வதேசக் கடல் பரப்பில் இருந்து அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஆடு மேய்க்கும் அப்பாவிகள் 130 பேர் கொல்லப்பட்டனர். அடேன் ஹஷி ஆசூரோ என்ற "பயங்கரவாதியை''க் கொல்ல அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலிலும் பல சாமானிய மக்கள் கொல்லப்பட்டனர்.


எத்தியோப்பிய இராணுவச் சிப்பாய்கள், சோமாலியாப் பெண்களைக் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதும்; அப்பாவி மக்களைத் தொண்டையை அறுத்துக் கொலை செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிப் போனது. இப்பயங்கரவாதப் படுகொலைகள் ஒருபுறமிருக்க, தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களால், சோமாலியாத் தலைநகர் மோகாதிஷ் ஆள் அரவமற்ற சுடுகாடாகிப் போனது. தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டிருந்த சோமாலியாப் பொருளாதாரம், மீண்டும் செயற்கையான பஞ்சத்தை சோமாலியாவின் மீது திணித்தது. இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பஞ்சம், பட்டினியில் இருந்து தப்பிக்க ஏறத்தாழ 25 இலட்சம் சோமாலியார்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக அலையத் தொடங்கினர்.


பஞ்சத்தைக் காட்டி, நிவாரண உதவி என்ற பெயரில் ஐ.நா. மூக்கை நுழைத்தது. ஐ.நா.வின் இந்த "உதவியை'' பட்டினிக்குள் தள்ளப்பட்ட சோமாலியா மக்களுக்குக் கிடைக்காமல், அமெரிக்காவால் கொம்பு சீவிவிடப்பட்ட யுத்தப் பிரபுக்கள் தட்டிப் பறித்துக் கொண்டனர். மேலும், சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஐ.நா. ஆதரவு பெற்ற அமைதிப் படையும் இறக்கிவிடப்பட்டது.


அமைதிப் படையோ, அமெரிக்கா திணித்த பொம்மை அரசைக் காக்கும் பணியைத் திறம்படச் செய்தது. சோமாலியா கடற்பரப்பில் நடக்கும் கடற்கொள்ளையைத் தடுப்பது என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கள் கடற்படையை சோமாலியா கடற்பரப்பில் நிறுத்திக் கொள்ளும் அனுமதியும் ஐ.நா. வால் வழங்கப்பட்டது, இப்படியாக, ஐ.நா.வின் ஆசியோடு, சோமாலியாவை அடிமைப்படுத்தும் அமெரிக்காவின் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.


எனினும், அமெரிக்காவின் ஆதிக்கக் கனவு முழுமையாகக் கைகூடவில்லை. பட்டினி போட்டும், ஏவுகணைத் தாக்குதல்களால் பயமுறுத்தியும் சோமாலியாவை அடிமைப்படுத்திவிடலாம் என்ற அமெரிக்காவின் திட்டத்தை, சோமாலியா மக்களின் ஆயுதப் போராட்டம் முறியடித்துவிட்டது. ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இறங்கிய அதே சமயத்தில், எத்தியோப்பியப் படைகள் சோமாலியாவில் இருந்து புறமுதுகிட்டு ஓடிப் போயின.


ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற அமெரிக்காவின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதிதான் சோமாலியா ஆக்கிரமிப்பு. எத்தியோப்பியப் படைகள் சோமாலியாவை விட்டு விலகிவிட்டாலும், அமெரிக்கா சி.ஐ.ஏ. மூலம் சோமாலியா யுத்தப் பிரபுக்களுக்கு இரகசியமாக ஆயுத உதவி செவதை நிறுத்தவில்லை என முதலாளித்துவப் பத்திரிகைகளே அம்பலப்படுத்துகின்றன.


சோமாலியா, சூடான், எரிட்ரீயா ஆகிய நாடுகளைக் கண்காணிக்க ஆப்பிரிக்காவின் கிழக்கு முனையில் ஏற்கனவே 1,800 அமெரிக்கச் சிப்பாய்களோடு இராணுவத்தளம் அமைத்து இயக்கி வரும் அமெரிக்கா, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்க, ""ஆப்ரிகாம்'' என்ற பெயரில் புதிய படை அணியொன்றையே உருவாக்கியிருக்கிறது. ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளத்தையும்; வைரம், யுரேனியம் போன்ற மூல வளங்களையும் கைப்பற்றிக் கொள்வதுதான், அமெரிக்க மேலாதிக்கத்தின் நோக்கம்.


சோமாலியாவில் இருந்து எத்தியோப்பியப் படைகள் விலகிய பிறகு, அந்நாட்டில் மீண்டும் இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலின் ஆட்சி அமைந்துள்ளது. எனினும், அமெரிக்காவின் இராணுவ முற்றுகையை எதிர்த்து ஆயுதந்தாங்கிப் போராடிய இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலின் ஆயுதப்படையான அல்ஷாபாபில் முஸ்லீம் தீவிரவாதிகளின் செல்வாக்கு ஓங்கிவிட்டதாகவும், அவ்வமைப்பு சோமாலியாவில் தனக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில் ஷாரியத் சட்டத்தை அமல்படுத்திவருவதாகவும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள் புலம்புகின்றன. இப்போக்குக் கவலைக்குரிய விசயம்தான் என்றாலும், வினை விதைத்துவிட்டு தினை அறுக்க அமெரிக்க ஆதரவாளர்கள் ஆசைப்படலாமா?

Mar 23, 2009

புஷ்ஷிக்கும் குரங்குக்கும் இடையிலான 20 ஒற்றுமைகள்

நிலமெல்லாம் ரத்தம் 6

6. பிரித்து ஆளும் சூழ்ச்சி.
நிலமெல்லாம் ரத்தம் - பா.ரா 6


ஒரு கோயிலை இடிப்பதென்பது எப்பேர்ப்பட்ட சரித்திர வடு என்பது மற்ற யாரையும் விட நமக்கு மிக நன்றாகத் தெரியும்

.
முதல் தலைமுறைக்குக் கண்ணைவிட்டு அகலாத காட்சியாகவும், எந்தத் தலைமுறைக்கும் நெஞ்சைவிட்டு நகராத சம்பவமாகவும் அப்படியே படிந்துவிடக்கூடியது அது.


யூதர்களைப் பொறுத்தவரை அப்படியரு சம்பவத்தைத் தம் வாழ்நாளில் இரண்டாவது முறையும் அவர்கள் பார்த்துவிட்டார்கள். கி.பி. 70-ம் ஆண்டு ரோமானியத் தாக்குதலுக்கு இலக்காகி, இடிக்கப்பட்ட அந்தத் தேவாலயம் இன்றுவரை மீண்டும் கட்டப்படவில்லை.


இன்னொரு தேவதூதன் இறங்கிவந்து மீண்டும் அதைக் கட்டித்தருவான் என்று யூதகுலம் காத்திருக்கிறது. இடிந்த கோயிலின் ஒரு செங்கல்லைக்கூட அவர்கள் திரும்ப எடுத்து அடுக்க முயற்சி செய்யவில்லை. அப்படியே விட்டுவிட்டார்கள்.


படையெடுப்பின் ஞாபகார்த்தமாக இன்னும் மிச்சமிருக்கும் கோயில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியைத்தான் அவர்கள் தம் புனிதத்தின் மிச்சமாக வைத்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.


கதையல்ல. உண்மையிலேயே இன்று உலகெங்கும் பரவி வசிக்கும் (இஸ்ரேலில் மட்டும் தொண்ணூறு சதவிகிதம்) சுமார் ஐம்பது லட்சம் யூதர்களுக்கும் அதுதான் நம்பிக்கை. அதுதான் ஞாபகார்த்தம்.கோயிலை தேவதூதன் வந்து கட்டித்தருவான். உடைந்த மனங்களை யார் வந்து கட்டித்தருவார்கள்?


அதுதான். அந்தத் தருணம்தான். முதல்முதலாக யூதர்கள் தம்மையரு தனித்தீவாக்கிக்கொண்டுவிட முடிவு செய்த தருணம் அதுவேதான். தமது மதத்துக்கும் கலாசாரத்துக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் எந்தக் காலத்திலும் மற்றவர்களால் ஆபத்து இருந்தே தீரும் என்று ஜுதேயா யூதர்களுக்கு அன்று உறுதியாகத் தோன்றியது.
முக்கியமாக, "இயேசுவைக்

கொன்றவர்கள்" என்று கிறிஸ்தவப் பிரசாரகர்கள் மிகத்தீவிரமாக உலகெங்கும் சொல்லிக்கொண்டு போனது மாபெரும் அவமானமாக அவர்களின் வாழ்வின் மீது கவிந்து நின்றது.


மிகக்கூர்மையாக கவனிக்கவேண்டிய விஷயம் இது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட காலத்தில் ஜுதேயா யூதர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். லட்சத்தைக் கூடத் தொடவில்லை. ஆயிரங்களில்தான் இருந்தது அவர்களது எண்ணிக்கை.


இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுந்து விண்ணேறிய சம்பவத்தையும் அடுத்து, அதே ஜுதேயா யூதகுலம்தான் இரண்டாகப் பிரிகிறது. இயேசுவைப் பின்பற்றி, அவர் பேசிய மொழிகளின் அடியற்றி வாழ முடிவெடுத்தவர்கள், கிறிஸ்தவர்கள் எனப்பட்டார்கள். அவர்களேதான் மிச்சமுள்ள தமது பூர்வீகக் குலத்தவரை அப்படிப் பழிக்கவும் தொடங்கினார்கள். வேற்று இனத்தவர்கள் அல்லர். முக்கியமாக, அராபியர்கள் அல்லர்.


இந்தச் சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தபோது பாலஸ்தீன அராபியர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்களது தேவதூதர் அப்போது பிறக்கவில்லை. இன்னும் சில நூற்றாண்டுகள் அவர்கள் காத்திருந்தே தீரவேண்டும்.


அதுவரை தமக்குத் தெரிந்த சிறுதெய்வங்களை (முக்கியமாக, கற்களை நட்டு வணங்கும் வழக்கம் அராபியர்களிடையே அதிகம்.) வணங்கிக்கொண்டு, உழுது பிழைத்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.


அப்போதைய பிரச்னை, அராபியர்களுக்கும் யூதர்களுக்குமானதல்ல. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமானது. யூதர்களுக்கும் ரோமானியர்களுக்குமானது.


(ரோம் அப்போது கிறிஸ்தவத் தலைமையகமாக ஆகியிருக்கவில்லை. மன்னர் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகள்தாம் அங்கேயும்.) ரோமானிய ஏகாதிபத்தியம், கிறிஸ்தவத்தின் அசுரவேக வளர்ச்சி என்கிற இரண்டு காரணிகள்தாம் யூதர்களின் அன்றைய பிரதானமான பிரச்னைகள்.ஆகவே கோயிலில் இடிக்கப்பட்ட சுவரை அவர்கள் தம் மனங்களுக்குள் எழுப்பிக்கொண்டார்கள்.


யூதகுலம் என்பது இறைவனால் "தேர்ந்தெடுக்கப்பட்ட" ஓர் இனம் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து, யூதர்களுக்கு இடையிலான ஒற்றுமையைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.


தமக்குச் சவால்விடுகிற சக்திகள் அனைத்தையுமே அவர்கள் சாத்தானாகக் கருதத் தொடங்கினார்கள்.ரோமானியர்களுக்கு எதிராக முதல் கலகத்தை உண்டாக்கிய "ஸிலாட்" இயக்கம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது. முன்னைவிட வலுவானதாக - முன்னைவிட ஆதரவாளர்கள் நிறைந்த ஓர் இயக்கமாக - முன்னைவிட திட்டமிட்டுச் செயல்படக்கூடிய அமைப்பாக!

அந்தக் காலத்தில் ரோமானியக் காலனிகளாக இருந்த எல்லா இடங்களிலும் "தாம் ரோமின் குடிமக்கள்" என்று சொல்லிக்கொள்வது ஒரு கௌரவமான விஷயமாகக் கருதப்பட்டது.


முதல் முதலில் கலாசாரச் செழுமை கொண்டதொரு சமூகமாக மேற்கில் ரோமானிய சாம்ராஜ்ஜியமே சொல்லப்பட்டது. இது ஓரளவு உண்மையும்கூட. அடிப்படைப் பொருளாதார வசதி, அடிப்படைக் கல்வி இரண்டிலும் அன்றைய ரோமானிய மன்னர்கள் தீவிர கவனம் செலுத்தியதே இதன் காரணம். கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த சமூகம், மேம்பட்ட சமூகமாக வருணிக்கப்படுவதில் வியப்பில்லை.


ஆனால் இதெல்லாம் ரோமில் மட்டும்தானே தவிர மத்தியக்கிழக்கில் பரவியிருந்த ரோமானியக் காலனிகள் அனைத்திலும் அல்ல. பாலஸ்தீன் தவிர அன்று ரோமானியக் காலனிகளாக இருந்த பெர்சியா, பாபிலோன், (இன்றைய ஈரான், ஈராக்), எகிப்து போன்ற இடங்களிலும், பொருளாதாரமல்ல; வறுமையே தாண்டவமாடியது.


கல்வியெல்லாம் சிறுபான்மையோரின் ஆடம்பர விஷயமாக இருந்தது. வாய்வார்த்தைக்கு "ரோமானியக் குடிமக்கள்" என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, உண்மையில் அவர்கள் பரிதாபத்துக்குரிய வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். விளைச்சல் வருமானமெல்லாம் ரோமுக்குப் போய்க்கொண்டிருக்க, ஏழைமையும் குறுங்குழு மனப்பான்மையும் மட்டுமே அப்பகுதி மக்களின் வாழ்க்கையாக இருந்தது.


இந்நிலையில், ஜுதேயா (இஸ்ரேல்) யூதர்களின் ஸிலாட் இயக்கம் மீண்டும் புத்துருவம் கொண்டு சிலிர்த்து எழ ஆரம்பித்தபோது, பாலஸ்தீனுக்கு வெளியே வசித்துவந்த யூதர்களும் அவர்களை ஆதரிக்க முன்வந்தார்கள். தேச எல்லைகளால் தாங்கள் பிரிந்திருந்தாலும் "யூதர்கள்" என்கிற அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்த ஒற்றுமை அவசியம் என்று கருதினார்கள்.


யூதர்களின் எழுச்சியில் இந்தச் சம்பவம் மிக மிக முக்கியமானதொன்று. உலகின் எந்த மூலையில் அவர்கள் பிரிந்து வசித்தாலும் ஒரு பிரச்னை என்றால் ஒன்று சேர்ந்தே தீர்வது என்கிற முடிவை முதல் முதலில் எடுத்தது அப்போதுதான். இன்றைக்கும் உலகின் எந்த மூலையில் உள்ள எந்த ஒரு யூதருக்கு என்ன பிரச்னை என்றாலும் அந்த நாட்டு அரசல்ல; இஸ்ரேல் அரசுதான் முன்னால் வந்து நிற்கிறது!


அதேபோல் இஸ்ரேலின் பிரச்னை எதுவானாலும் அது தன் சொந்தப் பிரச்னை என்றே எந்த நாட்டில் வசிக்கும் யூதர்களும் நினைக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் அதாவது, பாலஸ்தீன மண்ணில் யூதர்களின் தனி நாட்டை உருவாக்கியே தீருவது என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை யூதர்களின் அரசியல் பிரிவுத் தலைவர்கள் ஆரம்பித்தபோது ஒரே ஓர் அழைப்பைத்தான் விடுத்தார்கள். அதுவும் மென்மையாக. மிகவும் ரகசியமாக. "யூதர்களே, இஸ்ரேலுக்குக வாருங்கள்!"அவ்வளவுதான்.


லட்சக்கணக்கான யூதர்கள், காலம் காலமாகத் தாங்கள் வசித்து வந்த நாடுகளை அந்தக் கணமே துறந்து, சொத்து, சுகங்கள், வீடு வாசல்களை அப்படியே போட்டுவிட்டு இஸ்ரேலுக்குக் கிளம்பிவிட்டார்கள். இஸ்ரேல் நிச்சயமாக உருவாக்கப்பட்டுவிடுமா என்று அவர்கள் கேட்கவில்லை.


புதிய இடத்தில் தாங்கள் வசிக்க சௌகரியங்கள் இருக்குமா என்று பார்க்கவில்லை. வேலை கிடைக்குமா, வீடு கிடைக்குமா, வாழ விடுவார்களா, யுத்தங்களைச் சந்திக்க நேரிடுமா என்றெல்லாம் யோசிக்கவே இல்லை.ஒரு சொல். ஒரு கட்டளை. ஒரே முடிவு. யூதர்கள் என்கிற ஓர் அடையாள நிமித்தம் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த கதையைப் பின்னால் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.


இதற்கெல்லாம் ஆரம்பக் காரணியாக அமைந்த "ஸிலாட்" இயக்கத்தின் மறுபிறப்பை ஒட்டி நடந்த சம்பவங்களை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.


ஜெருசலேம் நகர ஆலயத்தை ரோமானியர்கள் இடித்தது, கி.பி. 70-ம் ஆண்டில். அதன் தொடர்ச்சியாகச் சுமார் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் யூதர்களுக்கும் ரோமானியர்களுக்குமான யுத்தங்கள் விட்டுவிட்டு நடந்துகொண்டுதானிருந்தன. ஜெருசலேம் யூதர்களுக்கு, பாலஸ்தீனுக்கு வெளியே இருந்த யூதர்கள் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.


அடிபணியக்கூடாது என்பது மட்டும்தான் அவர்களது திடசித்தமாக இருந்தது. யூதர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர். தாங்கள் வசிக்கும் நிலப்பரப்பைத் தாங்களே ஆளத் தகுதி படைத்தவர்கள்.


ரோமானியச் சக்கரவர்த்திக்கு அடிவருடிக்கொண்டிருக்க இனியும் அவர்கள் தயாராக இல்லை. ரோமானியச் சக்கரவர்த்திக்குப் பெரிய படை இருக்கலாம். ஆள் பலமும் பணபலமும் இருக்கலாம். ஆனால் யூதர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. யுத்தத்தில் வீரமரணம்தான் என்பது தெரிந்தே அவர்கள் துணிவுடன் இறங்கினார்கள். வெல்வதைக்காட்டிலும், தம் எதிர்ப்புணர்வைத் தொடர்ந்து பதிவு செய்துகொண்டு இருக்கவே அவர்கள் அப்போது விரும்பினார்கள்.

ஏனெனில், ரோமானியப் படைகளை எதிர்த்து வெற்றி பெற இயலாது என்பதை அவர்கள் மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள்.


கி.பி. 73-ம் வருடம் அது நடந்தது. சாக்கடல் ஓரத்தில் உள்ள மஸதா என்கிற இடத்தில் யூதர்கள் மீது ரோமானியர்கள் தாக்குதல் நிகழ்த்தினார்கள். யூத குல வரலாற்றில் அப்படியரு கோரசம்பவம் மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.
யுத்தமும் மரணமும் வாழ்வின் ஓர் அங்கம் என்று முடிவு செய்துவிட்ட யூதர்கள் ஒருபுறம். ஒரு யூதக் கொசுவும் உயிருடன் இருக்கக்கூடாது என்கிற வெறியுடன் மோதிய ரோமானியப்படை மறுபுறம். ரோமானியர்களைப் பொறுத்தவரை, யூதர்கள் சுயராஜ்ஜியத்துக்காக நிகழ்த்தும் கிளர்ச்சிகளை ஒடுக்குவதில் அது ஒரு பகுதி.

யூதர்களுக்கோ, சுயராஜ்ஜியம் என்பது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அது அவர்களின் சுயமரியாதை. காலனியாதிக்க ஒழிப்பை முன்னிட்ட சுய ஆஹுதி.மிகவும் கோரமான தாக்குதல் அது.
முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவுடன் ஆரம்பமான யுத்தம். எப்படியும் ரோமானியர்கள்தான் வெல்லப்போகிறார்கள் என்பது தெரிந்தே யூதர்கள் தம் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள்.

ஆனால் ரோமானியர்கள் நேரடி யுத்தத்தைக் காட்டிலும் அந்த முறை கெரில்லா முறைத் தாக்குதலையே அதிகம் மேற்கொண்டார்கள். இரவில் கிராமம் கிராமமாகப் புகுந்து தீவைத்துவிட்டு, அலறியோடும் யூதர்களை வெட்டிக்கொன்றார்கள். குழந்தைகளை உயரே தூக்கிக் கழுத்தை நெரித்து அப்படியே கடலில் வீசினார்கள்.


கண்ணில் பட்ட யூதப்பெண்கள் அனைவரின் மீதும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது. யூதர்களின் கால்நடைகளை வெட்டி வீதிகளில் எறிந்தார்கள். வீடுகள் இடிக்கப்பட்டன. கல்விக்கூடங்கள், கோயில்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன.


ரோமானியர்களிடம் பிடிபடுவதை விரும்பாத பல யூதக்குடும்பங்கள், அகப்படுவதைக் காட்டிலும் தற்கொலை செய்துகொண்டுவிடுவது சிறந்தது என்று முடிவு செய்து, கொத்துக்கொத்தாக இறந்துபோனார்கள்.
குடும்பத் தலைவர்கள் தம் மனைவி, குழந்தைகளைக் கொன்று, தன்னையும் மாய்த்துக்கொண்டார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான யூதக்குடும்பங்கள் இப்படித் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றன.


மரணத்தின் சகிக்கமுடியாத வாடை நிறைந்த சரித்திரத்தின் இந்தப்பக்கங்கள், இச்சம்பவம் நடந்ததற்குச் சுமார் 1,900 வருடங்கள் கழித்து மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தன. 1960களில் பாலஸ்தீனப் பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள், மஸதா யுத்தத்தின் எச்சங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன. ஒரு சிறு குகையினுள் சுமார் இருபத்தைந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எலும்புக் கூடுகள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டன.

கார்பன் பரிசோதனைகள், அந்த எலும்புக்கூடுகளின் வயதைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. ரோமானியர்களின் பிடியில் அகப்படுவதை விரும்பாத யூதக்குடும்பங்கள் மொத்தமாகத் தம்மை மாய்த்துக்கொண்ட பெருங்கதையின் ஏதோ ஓர் அத்தியாயம் அது!


இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஜெருசலேம் யூதர்களைச் சமாளிப்பதற்கு ரோமானியர்கள் ஒரு புதிய வழியை யோசித்தார்கள். ஜெருசலேம் நகரின் தெய்வீகப் பெருமையும், அந்தக் கோயிலின் ஞாபகங்களும் இயல்பாகவே அந்த நகரில் வசிப்பவர்களின் மனத்தில் பொங்கும் பெருமித உணர்வும்தான் அவர்களை, சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டுகின்றன என்று கருதிய ரோமானியர்கள், யூதர்களைப் பிரித்து ஆளலாம் என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி, ஜெருசலேமில் எந்த ஒரு யூதரும் இருக்கக்கூடாது. ஜுதேயாவின் யூதர்கள் அனைவரும் கடற்கரையோர கிராமங்களுக்குப் போய்விடவேண்டியது. (இன்றைய காஸா, அதன் சுற்றுப்புறப்பகுதிகள்.)
இதை ஓர் உத்தரவாகவே ரோமானியப் பேரரசு ஜுதேயாவில் கொண்டுவந்தது.


கடற்கரையோர கிராமங்களில் கூட யூதர்கள் மொத்தமாக வசிக்கக்கூடாது என்று நினைத்தவர்கள், அங்கே ஏற்கெனவே இருந்த பிற அராபிய சமூகத்தினரிடையேதான் துண்டு துண்டாக யூதர்களைக் கொண்டுபோய்ச் சொருகினார்கள்.இப்படிப் பிரித்தாளுவதன்மூலம் யூதர்களின் கிளர்ச்சியை அடக்கலாம் என்று நினைத்தது ரோமானிய அரசு.


ரோமானியர்கள் எதிர்பார்த்தபடியே கிளர்ச்சி அடங்க ஆரம்பித்தது உண்மைதான். ஆனால் கடற்கரையோர கிராமங்களுக்குக் குடிபெயர்ந்த யூதர்கள் வேறொரு காரியத்தை மிகத்தீவிரமாக அப்போது ஆரம்பித்திருந்தார்கள். கிளர்ச்சியைக் காட்டிலும் பெரியதொரு புரட்சி அது

நிலமெல்லாம் ரத்தம் 5

5] கிருஸ்துவமும் யூதர்களும்
நிலமெல்லாம் ரத்தம் - பா.ரா 5


கிறிஸ்தவ மதத்தின் எழுச்சி, யூதகுலத்துக்கு விடப்பட்ட முதல் மற்றும் மிகப்பெரிய சவால். இதில் சந்தேகமே இல்லை.


கி.பி. 300-ம் ஆண்டு சிரியா, ஆசியா மைனர், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வசித்துவந்த யூதர்களில் மிகப்பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தார்கள்.


கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்ட ஜேம்ஸ், பால் போன்ற இயேசுவின் தோழர்கள் அக்காரணத்தாலேயே சிறைப்பிடிக்கப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும் (ஜேம்ஸை யூதர்கள் கல்லால் அடித்துக் கொன்றார்கள். பால், ரோம் நகருக்குச் சென்றபோது மன்னர் நீரோ அவரை சிறையில் அடைத்தார். அங்கேயே அவர் உயிரையும் விட்டார்.) மக்களிடையே மிகப்பெரிய அனுதாபத்தை உண்டாக்கியது.

இது, முன்னைக்காட்டிலும் வேகமாக கிறிஸ்தவம் பரவ உதவியாக அமைந்ததை மறுக்க இயலாது.கிறிஸ்தவம் இப்படிப் பரவத் தொடங்கிய அதே வேளை, ஜுதேயாவின் யூதர்களுக்கு வேறொரு வகையிலும் நெருக்கடி ஆரம்பமானது.


இயேசுவின் சீடர்களால் புதிய ஏற்பாடு எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் பாலஸ்தீன் என்பது (அப்போது பலெஸ்தீனா) வடக்கே சிரியா, லெபனான் தொடங்கி தெற்கே எகிப்தின் சில பகுதிகள்வரை நீண்டதொரு மிகப்பெரிய நிலப்பரப்பு. அதில் ஜுதேயா என்கிற இஸ்ரேலின் இடம் மிகச் சொற்பமானது. ஆனபோதும் (ரோமானிய ஆளுகைக்கு உட்பட்ட அளவில்) அப்போது அது தன்னாட்சி அதிகாரம் பெற்றது.


ஹெரோத் மன்னன் இருந்தவரை, ரோமானிய சக்கரவர்த்திக்கு அவர் யாராக இருந்தாலும் மிக நெருக்கமானவராக இருந்தான். இதனால் படையெடுப்பு போன்ற ஆபத்துகள் ஏதும் ஜுதேயாவுக்கு இல்லாமல் இருந்தது. அங்கே ஏதாவது ஒரு பிரச்னை என்றால் அது ஹெரோதால் மட்டுமே உண்டாக்கப்படக் கூடியதாக இருந்தது.கி.மு. நான்காம் நூற்றாண்டில் ஹெரோத் இறந்ததும், ரோம் அதிகாரபீடம் ஜுதேயாவை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுவிட்டது.


அதன்பிறகு, ஹெரோத் மாதிரி முடிசூடிக்கொண்டு யாரும் ஆட்சிபுரிய முடியவில்லை. ரோமானிய மன்னரின் பிரதிநிதியாக கவர்னராக மட்டுமே ஆள முடிந்தது. அது, ஹெரோதின் மகனே ஆனாலும் சரி.ஹெரோதின் மரணம் தொடங்கி பல நூற்றாண்டுகளுக்கு இப்படித்தான் இஸ்ரேல், ரோமானியக் காலனியாக இருக்கவேண்டியிருந்தது.


ரோம் அதிகாரபீடம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப் படவேண்டியிருந்தது. அரசியல் ரீதியில் இதனால் பெரிய பிரச்னைகள் ஏதுமில்லாத போதும் மத ரீதியில் அவர்களுக்குச் சில தர்மசங்கடங்கள் இருந்தன.


காரணம், அப்போது ரோமில் திட்டவட்டமான மதம் என்று ஏதும் கிடையாது. ஆங்காங்கே சிறு தெய்வ வழிபாடுகள் இருந்தன.


பெரும்பாலும் மக்களுக்கு மன்னரே கடவுள். ரோமில் பரவியிருந்த யூதர்களாலேயே இதனைச் சகிக்க முடியவில்லை என்கிறபோது, இந்த "மன்னரே கடவுள்" திட்டம் ஜுதேயாவுக்கும் பொருந்தும் என்றொரு சட்டம் கி.பி 40-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.


அப்போது ரோமானிய மன்னராக இருந்தவரின் பெயர் காலிகுலா). அவர்தான், இனி ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட அனைத்து இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் தன் சிலையை மட்டுமே வைத்து, தன்னை மட்டுமே தொழவேண்டும் என்றொரு விபரீத உத்தரவைப் பிறப்பித்தார்.


அரசியல் ரீதியிலான எந்தவிதத் திணிப்பையும் சகித்துக்கொள்ளத் தயாராக இருந்த யூதர்களால், இந்த வழிபாட்டுத் திணிப்பை மட்டும் ஏற்க முடியவில்லை. யூதர்களுக்கு ஒரே கடவுள். அவர்கள் தம் கடவுளை ஜெஹோவா என்று அழைப்பார்கள். அவரைத்தவிர வேறு யாரையும் தொழ அவர்கள் தயாராக இல்லை. (இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே "ஒன்றே கடவுள்" என்கிற கருத்தாக்கத்தைக் கொண்டிருந்த மதம் யூத மதம்தான்.)ஆகவே அவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.


இப்படியரு உத்தரவுக்கு அடிபணிவதைக் காட்டிலும் இறப்பதே மேல் என்று முழங்கினார்கள்.ஜுதேயாவின் அப்போதைய கவர்னராக இருந்தவர், ஆக்ரிப்பா-1 என்பவர்.


அவர், நிலைமையை எடுத்துச் சொல்லி விளக்கம் அளிப்பதற்காக ரோமுக்குப் போனார். யூதர்களின் வழிபாட்டு முறை என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது. திடீரென்று அதை மாற்றச் சொல்வது முடியாத காரியம். ரோமானிய மன்னரின் மீது அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் தொழுவதற்குரிய கடவுளாக அவரை எந்த யூதரும் ஏற்கமாட்டார்கள் என்பதைக் கொஞ்சம் சுற்றி வளைத்து ஒருவாறு தெரியப்படுத்திவிட்டார்
ஆக்ரிப்பா-1.அவருடைய

நல்லநேரம், ரோமானிய மன்னர் காலிகுலா, கோபமடையாமல், ஜுதேயாவின் தேவாலயங்களில் தன்னுடைய சிலையை வைத்துத் தொழவேண்டுமென்கிற அரசு உத்தரவைத் திரும்பப்பெற முடிவு செய்தார்.ஆனாலும் போராட்டத்தில் இறங்கியதால் கைதுசெய்யப்பட்ட யூதர்களை அவர் மன்னிக்கத் தயாராக இல்லை. அவர்கள் யாவரும் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்று நினைத்தார்.


அரசர் சொல்வதைக் கேட்டால் அது ராஜ விசுவாசம். கேட்க மறுத்தால் ராஜதுரோகம். ராஜதுரோகக் குற்றச்சாட்டுக்குத் தண்டனை என்றால், அது மரணம் மட்டுமே. இதனடிப்படையில் ஆயிரக்கணக்கான ஜுதேயா யூதர்கள் மரணத்தின் வாசலில் காத்திருந்தபோது, அவர்களுக்கு ஓர் அதிர்ஷ்டம் அடித்தது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, சற்றும் எதிர்பாராத வகையில் மன்னர் காலிகுலா அவரது அரசியல் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார்.


ரோமில் நிகழ்ந்த ஆட்சிமாற்றம், இங்கே இஸ்ரேல் யூதர்களின் உயிரைக் காப்பாற்றியது.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கி.பி. 66-ம் ஆண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜுதேயா என்கிற இஸ்ரேலில் வேறெந்தப் பிரச்னையும் பெரிதாக எழவில்லை. சுதந்திர வேட்கையோ, தனிநாடு கோரிக்கையோ அவர்களிடம் இல்லை.
பாலஸ்தீனப் பெருநிலத்திலிருந்த மற்ற சில நாடுகளும் கூட இப்படி ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டுத்தான் இயங்கின என்பதால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாகவே படவில்லை.


ரோமானியர்கள், ஆளப்பிறந்தவர்கள். நாம் அடங்கி வாழவேண்டியவர்கள். இது இயல்பாக மக்கள் மனத்தில் ஊறிப்போயிருந்தது.கி.பி.66-ல்தான் அங்கே முதல்முதலில் ஒரு புரட்சி ஏற்பட்டது. புரட்சி செய்தவர்களும் யூதர்களே.
ஜெருசலேமை முற்றிலுமாக ரோமானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து, ஒரு முழுமையான யூத சாம்ராஜ்ஜியத்தை அமைக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட அந்தப் புரட்சியை "ஸிலாட்" என்கிற அமைப்பினர் முன்னின்று நடத்தினார்கள்.


ஒட்டுமொத்த ஜெருசலேம் யூதர்களின் எண்ணிக்கையைப் பார்க்க, ஸிலாட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையோர்தாம். அவர்களது புரட்சி, மக்களுக்கு சந்தோஷத்தைக் காட்டிலும் பயத்தையே தந்தது. ஏனெனில், அவர்கள் எதிர்ப்பது ஒரு சாதாரண தேசத்தையோ, குறுநில மன்னனையோ அல்ல. மாபெரும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியை எதிர்த்துப் புரட்சி செய்ய ஆரம்பித்திருந்தார்கள். இது நிச்சயம் அபாயகரமானது என்று கருதினார்கள்.


ஆனால், புரட்சிக்காரர்கள் மிகச் சுலபமாக ஜுதேயா கவர்னரின் ராணுவத்தைச் சிதறடித்து ஜெருசலேமைக் கைப்பற்றிவிட்டார்கள். தவிர இஸ்ரேலின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் கணிசமான இடத்தை அவர்களால் ஆக்கிரமித்துவிட முடிந்தது. ஆனால், எப்படியும் ஒரு முழுமையான யூத அரசை நிறுவிவிட முடியும் என்று அவர்கள் கொண்ட நம்பிக்கை, அடுத்த ஒரு வருடத்தில் தரைமட்டமானது.


இப்போது, ரோமானியப்படை முழு வேகத்தில் இஸ்ரேலின் மீது தாக்குதலை ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக இழந்த இடங்களை மீட்கத் தொடங்கியது.கி.பி. 70-ம் ஆண்டு அது நடந்தது. பிரளயம் வந்தது போல இஸ்ரேலுக்குள் நுழைந்த மாபெரும் ரோமானியப் படையன்று, இண்டு இடுக்கு விடாமல் அடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தது. புரட்சி செய்த ஸிலாட் அமைப்பினர் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள். கோரதாண்டவம் என்பார்களே, அது!


ஜெருசலேம் உள்பட புரட்சிக்காரர்கள் கைப்பற்றியிருந்த அத்தனை இடங்களையும் ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தியது ரோமானிய ராணுவம். ரோமானியச் சக்கரவர்த்தியின் மகனான டைடஸ் என்பவனே அப்போது ராணுவத் தளபதியாக வழிநடத்திக்கொண்டு வந்திருந்தான். தம்மை எதிர்த்த அத்தனை பேரையும் அவர்கள் கொன்றார்கள்.


தடுத்த சுவர்களையெல்லாம் இடித்தார்கள். கண்ணில்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள். சாலைகள் சிதைந்தன. குளங்கள் உடைந்தன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று அவர்கள் வித்தியாசம் பார்க்கவே இல்லை. கண்ணில் தென்பட்ட அத்தனை யூதர்களையும் கதறக் கதறக் கொன்று வீசினார்கள்.


இந்தத் தாக்குதலின் உச்சகட்டம் ஜெருசலேம் நகரில் நிகழ்ந்தது. ஆ, அந்தக் கோயில்! இந்தக் கோயிலை முன்னிட்டு அல்லவா யூதர்கள், ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆணையை முதல் முதலில் எதிர்த்துக் கலகம் செய்தார்கள்? இதைத்தானே ஒட்டுமொத்த யூதர் குலத்துக்கே புனிதத்தலம் என்று சொல்லி, தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள்? அவர்களது ஆணவத்தின் அடையாளமல்லவா இது?


இதன் பழம்பெருமைதானே அவர்களைத் திமிர் பிடித்து ஆடவைத்தது?இனி எக்காலத்துக்கும் யூதர்கள் புரட்சி என்று இறங்க நினைக்கக்கூடாதபடிக்குத் தாக்குதலை முழு வேகத்தில் நடத்தவேண்டும் என்று நினைத்தவர்கள், கோயிலை இடிக்க ஆரம்பித்தார்கள். தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அது தூள்தூளாகச் சிதறி, உதிர ஆரம்பித்தது. கதவுகள் பெயர்த்து எடுக்கப்பட்டன.

அலங்கார விளக்குகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தூண்கள் இடிக்கப்பட்டன. மாடங்களில் தீவைத்தார்கள். முன்னதாக வெகு ஜாக்கிரதையாக உள்ளே இருந்த அத்தனை மதிப்புள்ள பொருள்களையும் சுருட்டி வாரி மூட்டைகட்டி ரோமுக்கு அனுப்பிவிட்டார்கள்.


அவற்றுள் முக்கியமானவை, கோயிலின் மிகப்புனிதமான பொருள்களாகக் கருதப்பட்ட தங்கத்தாலான பாத்திரங்களும், வேலைப்பாடுகள் மிக்க, பிரமாண்டமான தங்க மெழுகுவர்த்தித் தாங்கி ஒன்றும். ரோமானியர்களின் படையெடுப்பை, படுகொலைகளைக் கூட யூதர்கள் அமைதியுடன் சகித்துக்கொண்டிருந்திருப்பார்கள்.


ஆனால் ஜெருசலேம் தேவாலயத்தை அவர்கள் தாக்கத் தொடங்கியதும், பொறுக்கமுடியாமல் எதிர்த்துப் போரிட வீதிக்குத் திரண்டு வந்தார்கள்.ஆனால், பிரமாண்டமான ரோமானியப் படையின் எதிரே ஜெருசலேம் யூதர்கள் வெறும் கொசு. கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் யூதர்கள் அந்தப் போரில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிறது வரலாறு.
இதைத்தவிர, ஜெருசலேம் தேவாலயத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த மதகுருக்களைத் தனியே நிற்கவைத்துக் கழுவிலேற்றினார்கள் ரோமானியர்கள்.

ஜெருசலேம் நகரமே ஒரு மாபெரும் குப்பைத்தொட்டி போலக் காட்சியளித்தது. எங்கும் பிணங்கள். ரத்தம். இடிபாடுகளின் இடையே கேட்ட கதறல் ஒலிகள். வல்லூறுகள் வானில் வட்டமிட்ட வேளையில் கொள்ளையடித்த பொருள்களை மூட்டைகட்டிக்கொண்டு ரோமானியப்படை ஊருக்குத் திரும்ப ஆரம்பித்தது.


இரண்டாவது முறையாகக் கட்டப்பட்ட அந்த ஆலயம் மீண்டும் இடிக்கப்படும் என்று முன்னரே யூகித்துச் சொன்ன இயேசுவைத் தான் அப்போது ஜெருசலேம் நகரத்து யூதர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.கிறிஸ்தவத்தின் மீதான அவர்களது வெறுப்பு இன்னும் பல மடங்காக உயர ஆரம்பித்தது

நிலமெல்லாம் ரத்தம் 4

4] கி.பி.
நிலமெல்லாம் ரத்தம் 4 - பா.ரா

யூதர்களின் சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி.

மோஸஸுக்குப் பிறகு இன்னுமொரு தேவதூதனின் வரவு அவர்களுக்கு நியாயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், யூத குலத்தின் அடையாளமே ‘தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்’ என்பதுதான். ஆனால் இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை.

பெத்லஹெமில் (Bethlehem) இயேசு பிறந்தபோதே யூத மதகுருமார்கள் உள்ளுணர்வின் மூலமும் பழைய வேத வசனங்களின் மூலமும் அவரை அடையாளம் கண்டு, ஹெரோத் மன்னரிடம் இயேசுவின் பிறப்பைக் குறித்துத் தெரிவித்துவிட்டார்கள்.

‘இஸ்ரேல் மக்களை ஆளப்போகும் தலைவன் இன்ன இடத்தில், இன்ன காலகட்டத்தில் பிறப்பான்’ என்று எழுதி வைக்கப்பட்ட பழைய தீர்க்கதரிசன வரிகளைச் சுட்டிக்காட்டி அவனுக்குத் தகவல் சொன்னார்கள்.
ஹெரோத் ஒரு மன்னன். அதுவும் சர்வாதிகாரி. ‘மக்களை ஆளப்போகும் தலைவன்’ என்கிற பிரயோகம் அவனுக்கு ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே தரமுடியும். அதாவது, தன் பதவிக்கு ஆபத்து.

ஆகவே இயேசுவைக் கொன்றுவிட விரும்பி, ஆட்களை ஏவினான் ஹெரோத்.
உயிர்பிழைக்க, இயேசுவின் தந்தை ஜோசப், தம் மனைவி மேரியை (ஹீப்ரு மொழியில் மிரியம் Miriam) அழைத்துக்கொண்டு, குழந்தையுடன் எகிப்துக்குத் தப்பிப்போனார். பயமும் வெறுப்பும் மிகக்கொண்ட ஹெரோத், இந்த விஷயம் தெரியாமல் பெத்லஹெமில் அப்போது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எத்தனைபேர் இருந்தார்களோ, அத்தனை பேரையும் கொன்று வீசினான்.
கொன்ற குழந்தைகளில் ஒன்று எப்படியும் இயேசுவாக இருக்கும் என்கிற குருட்டு நம்பிக்கை!

ஹெரோத் உயிரிழக்கும்வரை இயேசு ஜெருசலேமுக்குத் திரும்பி வரவில்லை. மன்னன் இறந்த செய்தி கிடைத்தபிறகே அக்குடும்பம் ஊர் திரும்ப முடிவு செய்தது. அப்போதும் கூட ஹெரோதின் மகன்தான் பட்டத்துக்கு வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டு ஜெருசலேமுக்கு வராமல் நாசரேத்துக்குப் போய்விட்டார்கள்.

இயேசுவுக்கு அப்போது எட்டு வயது. தமது வாலிப வயதில்தான் முதல்முதலில் ஜெருசலேமுக்கு வந்தார் இயேசு. இளைஞர் இயேசுவை அங்கே மிகவும் கவர்ந்த இடம், கோயில். கி.மு. 950_ல் முதல்முதலில் கட்டப்பட்ட கோயில். பிறகு இடிக்கப்பட்டு, பல்லாண்டுகாலம் இருந்த அடையாளம் மட்டுமே மிச்சமிருக்க, ஹெரோத் மன்னரால் மீண்டும் கட்டப்பட்ட கோயில்.

மணிக்கணக்கில், நாள்கணக்கில் கோயிலிலேயே இருந்தார் அவர். பல சமயங்களில் சுயநினைவின்றியே பிரார்த்தனையில் தோய்ந்திருந்தார். அப்போதெல்லாம் ஜெருசலேம் மக்கள் அவரை ஒரு தேவதூதராக யோசித்துப் பார்க்கவில்லை. பக்தி மிக்க ஓர் இளைஞர். அவ்வளவுதான்.

‘இதோ, தேவதூதன் வருகிறான், வரப்போகிறான், வந்தேவிட்டான்’ என்று தொடர்ந்து இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்த ஜான் என்கிற பாதிரியாரிடம் (யோவான் என்று பைபிள் சொல்லும். ஒட்டக ரோமத்தால் ஆன உடை அணிந்தவர், வெட்டுக் கிளியையும் காட்டுத்தேனையும் உணவாக உட்கொள்பவர் என்றெல்லாம் ஜானைப் பற்றிய நுணுக்கமான விவரங்களைத் தருகிறது பைபிள்.)
ஜோர்டன் நதி தீரத்தில் ஞானஸ்நானம் பெற்று இயேசு தன் பேருரைகளை நிகழ்த்தத் தொடங்கியபோதுதான் மக்கள் அவரைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.அவரைத் தனித்துக்காட்டிய முதல் விஷயம், அவர் தம்மை ‘மனிதகுமாரன்’ (பைபிளில் மனுஷகுமாரன் என்று வரும். Son of Man) என்று குறிப்பிட்டது. இது மிக முக்கியமான குறிப்பு.
ஏனெனில் யூதகுலம் அப்படியருவனைத்தான் காலம் காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. யூதர்களின் வேதத்தில், மனிதகுமாரன் எப்படி இருப்பான் என்பது பற்றி ஒரு குறிப்பு உண்டு.

இறுதித் தீர்ப்பு நாளில் நீதி வழங்கும் நீதிபதியைப்போல் அவன் இருப்பான் என்று தான் கனவில் கண்டதாக யூதர்களின் வேதத்தில் டேனியல் என்கிற தீர்க்கதரிசி எழுதிய பகுதிகளில் வருகிறது.

டேனியலின் கனவில் கிடைத்த குறிப்பு தன்னைப்பற்றியதுதான் என்பதாக இயேசு ஒருபோதும் சொன்னதில்லை. ‘கர்த்தரால் மனிதகுமாரனுக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர் விளக்கிய விஷயங்கள் கூட படர்க்கையில்தான் (Third person) வருகின்றனவே தவிர ஒருபோதும் ‘கர்த்தரால் எனக்குச் சொல்லப்பட்டது’ என்பதுபோல அவர்
குறிப்பிட்டதில்லை.

இயேசுவை ஏற்க மனமில்லாத யூதர்கள், இதையெல்லாமும் ஆதாரமாகக் காட்டி, ‘வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதகுமாரன் இவர் அல்லர்’ என்று சொன்னார்கள்.

ஆனால், இதெல்லாம் இயேசுவுக்கு ஆதரவாளர்கள் பெருகுவதைத் தடுக்கவில்லை. காரணம், எல்லாவற்றையும் விட முக்கியமாக அவர் ஒரு தெய்வீக மருத்துவராக இருந்தார்.

குருடர்களைப் பார்க்கச் செய்வது, செவிடர்களைக் கேட்கச் செய்வது, ஊமைகளைப் பேசச்செய்வது முதல், இறந்த ஒரு குழந்தையை உயிர் பிழைத்து எழச்செய்தது வரை அவர் நிகழ்த்திய அற்புதங்களை பைபிள் பக்கம் பக்கமாக விவரிக்கிறது.

எளிய மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு பின்பற்ற இது ஒரு முக்கியக்காரணம். பிறகு அவரது மலைப் பிரசங்கங்கள். அதில் இருந்த எளிமை. ஏழைகளின் மீதான பரிவு.

வன்முறைக்குப் பதிலாக வன்முறையை அல்லாமல் சமாதானத்தைத் தீர்வாகச் சொன்ன நூதனம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு நெருக்கடி என்றால் மதவழக்கத்தை மீறுவதும் தவறல்ல என்கிற முற்போக்கு மனப்பான்மை.

யூதர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அவர்களுக்கு ஓய்வுநாள். அன்று எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்கள். முற்றிலும் பிரார்த்தனைக்கான தினம் என்று பொருள். (Sabbath day)
அப்படியான ஒரு தினத்தில் இயேசு ஒரு தேவாலயத்தில் கை ஊனமாகி, சூம்பிய நிலையில் இருந்த ஓர் ஏழையைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார். (மத்தேயு 12:10)இது மத விரோதச் செயல் என்று யூத குருமார்கள் குற்றம் சாட்டினார்கள். ‘மனுஷகுமாரன், ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்’ என்று சொல்லிவிட்டார் இயேசு.

“உங்கள் ஆடு ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால் உடனே போய் தூக்கி எடுக்கமாட்டீர்களா? ஆட்டைவிட மனிதன் எவ்வளவோ மேலானவன்’’ என்கிற அவரது மனிதநேயம் அங்கே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. மதத்துரோகி என்பதாக அவர் வருணிக்கப்பட்டார்.

இயேசுவைக் கொல்லவும் முடிவு செய்தார்கள்.
இந்த ஒருமுறை மட்டுமல்ல. இம்மாதிரி பல தருணங்களில் கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து வேறு வேறு இடங்களுக்குப் பயணம் செய்தபடியே இருந்தார் அவர். போகிற இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அவர் பின்னால் போனது.இதன் தொடர்ச்சியாகத்தான் ஜெருசலேம் தேவாலய மதகுருமார்களின் நடத்தை மீதான அவரது விமர்சனங்களும், கோயில் நிச்சயமாக இடிக்கப்படும் என்கிற தீர்க்கதரிசனமும், அவரைக் கொலை செய்தே ஆகவேண்டும் என்கிற தீர்மானத்துக்கு யூத மதகுருக்களைக் கொண்டுவந்து சேர்த்தன.

தாம் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் இரவு, தமது பன்னிரண்டு சீடர்களுடன் இறுதி விருந்து அருந்தினார் இயேசு. யூதாஸ் என்கிற சீடன் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக அவரை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்க உடன்பட்டான்.அன்றிரவு அது நடந்தது. இயேசு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது யூத மதகுருக்கள் அனுப்பிய அடியாள்களுடன் அங்கே வந்த யூதாஸ், இயேசுவை நெருங்கி முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தான்.
உடனே அவரைக் கைது செய்து இழுத்துப்போனார்கள்.
ஆனால், அவர்கள் முன்னமே தீர்மானித்திருந்தபடி இயேசுவுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டுமானால் அதற்குப் போதிய காரணங்கள் வேண்டும். சாட்சிகள் வேண்டும்.

ஜெருசலேமில் அப்படியான காரணங்களையோ, அவற்றைச் சுட்டிக்காட்டும் சாட்சிகளையோ குருமார்களால் உடனே தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஆகவே, கஷ்டப்பட்டு இரண்டு பொய்சாட்சிகளைத் தேடிப்பிடித்தார்கள். அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு இதுதான்:

ஜெருசலேம் நகரின் பெருமைமிக்க கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கவும், மூன்றே நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று இயேசு சொன்னார்.

போதாது? மரணதண்டனை விதித்துவிட்டார்கள். ஆனால் ஒரு மரியாதைக்காகவாவது மன்னருக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தியாக வேண்டும்.

அப்போது இஸ்ரேல், ரோமானியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ரோம் மன்னரின் பிரதிநிதியாக கவர்னர் பான்ட்டியஸ் பிலாட் (Pontius Pilate பைபிளில் பொந்தியு பிலாத்து என்று குறிப்பிடப்படும் பிலாத்து மன்னன் இவனே.) ஆட்சிசெய்துகொண்டிருந்தார்.

வழக்கைக் கேட்ட அவருக்கு, இது ஓர் அநியாயமான வழக்கு என்றே தோன்றியது. ஆயினும் மதகுருக்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டத்தினர், இடைவிடாமல் ‘இயேசுவுக்கு மரணதண்டனை தந்தே ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தியதால், வேறு வழியில்லாமல் தம் சம்மதத்தைத் தெரிவித்தார்.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக ஒரு சம்பவம் நடந்தது. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், தன் பிழைக்கு வருந்தி, குற்ற உணர்ச்சி மேலோங்க, தற்கொலை செய்துகொண்டான். முன்னதாக, தனக்கு சன்மானமாக அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளையும் மதகுருக்களிடமே திருப்பிக்கொடுத்துவிட்டுத்தான் வந்திருந்தான்.

கொஞ்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒருவிநாடி சலனமடைந்து அவன் செய்த காரியம் இயேசுவின் உயிரைக் குடித்தது. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய இரும்புச்சுவர் ஒன்று எழுப்பப்படுவதற்கும் காரணமானது. யூதாஸ் தன் தவறுக்கு அன்றே வருந்தியதும், தற்கொலை செய்து கொண்டதும், யாருக்கும் ஒரு பொருட்டாக இல்லை.

அவனைத் தூண்டிவிட்ட யூத மதகுருக்களே கூட, ‘குற்றமில்லாத ரத்தத்தைக் காட்டிக்கொடுத்து நான் பாவம் செய்தேன்’ என்று வருந்திய யூதாஸிடம், ‘எங்களுக்கென்ன? அது உன்பாடு!’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
இஸ்ரேலின் கவர்னராக பிலாட் இருந்தது, கி.பி. முதல் நூற்றாண்டின் 27லிருந்து 36_ம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலம் என்று சரித்திரம் சொல்கிறது. இதனடிப்படையில் இயேசுவின் மரணம் 30_35_ம் ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது. துல்லியமான விவரங்கள் ஏதும் இதுபற்றிக் கிடையாது.

சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து அவர் விண்ணுக்குச் சென்றார் என்கிற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைதான் யூதர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டும் முதல் ஆதாரம். ஏனெனில், யூதர்களின் நம்பிக்கையின்படி, மரணத்துக்குப் பின் தேவதூதன் உயிர்த்தெழுவதென்பது கிடையாது. வேறுபாடு அங்கேதான் தொடங்குகிறது.

இயேசு உயிர்த்தெழுந்ததாக நம்பியவர்கள், இயல்பாக சனாதன யூதர்களிடமிருந்து கருத்தளவில் விலகிப்போனார்கள். இயேசுவுக்குப்பின் அவர் விட்டுச்சென்றதைத் தொடரும் பொறுப்பின் தலைமை அதிகாரியாக இருந்த ஜேம்ஸ், (ஹீப்ரு மொழியில் ஜேக்கப். பைபிளில் யாக்கோபு என்று வரும்.) அவர்களின் வழிகாட்டியாக இருந்தார்.

கி.பி.62_ல் ஜேம்ஸும் யூதர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். தொடர்ந்தும் தீவிரமாகவும் அவர் இயேசுவை தேவகுமாரனாகவும் கடவுள் அம்சம் பொருந்தியவராகவும் சித்திரித்துச் சொற்பொழிவுகள் ஆற்றியதே இதற்குக் காரணம்.ஜேம்ஸுக்குப் பிறகு ஜெருசலேம் நகரின் கிறிஸ்தவ தேவாலயத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சைமன்.
இவர்களெல்லாம் இயேசுவின் மறைவுக்குப் பிறகு ஜெருசலேம் நகரில் இருந்தபடியே தமது பிரசாரங்களை நிகழ்த்திவந்தார்கள்.
ஆனால், முதல் முதலாக கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதை ஓர் இயக்கமாக ஆரம்பித்துச் செயல்படுத்தியவர், பால். (Paul. பைபிளில் பவுல் அப்போஸ்தலர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.)

ஸால் (Saul) என்ற இயற்பெயர் கொண்ட யூதரான இவர், கிறிஸ்தவ மதத்தை நம்பி ஏற்றபிறகு பால் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். துருக்கியில் பிறந்த பால், மத்திய ஆசியாவெங்கும் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு, மத்தியதரைக்கடலின் கிழக்குக் கரை வழியே மிக நீண்ட பயணம் மேற்கொண்டார்.

உண்மையும் உருக்கமும் கொண்ட அவரது பேச்சால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கவரப்பட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். ஊர் ஊராக, நகரம் நகரமாக, தேசம் தேசமாக கிறிஸ்தவ மதம் வேகம் கொண்டு பரவத் தொடங்கியது.

திரும்பி வந்துவிடு

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

Mar 22, 2009

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

சிந்தனையில் மோரிஸ் புகை!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்"

(அல்-குர்ஆன் 10: 92)


இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!

கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (அல்-குர்ஆன் 10:92)

தொழுகையில் ஷைத்தானின் ஊசலாட்டங்கள்!

நம்முடைய தொழுகைகளின் போது சில நேரங்களில் ஷைத்தானின் ஊசலாட்டங்கள் ஏற்பட்டு அது குர்ஆன் ஒதுவதில் பிரச்சனையாகி அதன் மூலம் தீய எண்ணங்கள் உண்டாகி எத்தனை ரக் அத்துகள் தொழுதோம் என்று கூட சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது! ஷைத்தானின் ஊசலாட்டங்கள் எந்த அளவுக்கு நம்மை பாதிக்கும் என்றால் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துகள் தொழும் போது கூட எத்தனை ரக்அத்துகள் தொழுதோம் என்ற சந்தேகத்தைக் கிளப்புவான்.

இது போன்ற ஒரு சம்பவம் உதுமான் பின் அபீ அல் ஆஸ் (ரலி) என்ற நபித் தோழருக்கு ஏற்பட்டது. ஆகையால் அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் “நான் தொழும் போது எனக்கும் என் தொழுகைகும் இடையில் ஷைத்தான் வந்து நான் குர்ஆன் ஒதுவதில் பிரச்சனையை உண்டாக்குகிறான்” என்று கூறினார்கள்.

அதற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அந்த ஷைத்தானுக்கு பெயர் “கன்ஜப்” என்று கூறினார்கள். அவன் அவ்வாறு தொழுகையின் இடையூறு செய்தால் “ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறி இடது பக்கமாக முகத்தை திருப்பி மூன்று முறை துப்பிக்கொள்” என்று கூறினார்கள். (இதை தொடர்ந்து) அவர், “நான் இந்த முறையை பின் பற்றிய போது அல்லாஹ் ஷைத்தானை என்னை விட்டும் தூரமாக்கி விட்டான்” கூறினார்.

இந்த ஹதீஸ் இரண்டு முறையில் ஷைத்தானை விரட்டுகிறது.

முதலாவதாக “ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்” என்று நாவினால் மொழிவதன் மூலமாக.

இரண்டாவதாக இடது புறம் மூன்று முறை துப்புவதன் மூலம். இது துப்பும் போது காற்றை வெளியாக்குவது போலாகும். ஆனால் பக்கத்தில் தொழுபவருக்கு தொந்தரவு இல்லாமலோ அல்லது பள்ளிவாசலை அசுத்தமாக்காமலோ துப்பும்போது சிறிய அளவு எச்சில் துகள்கள் வந்தால் தவறு ஏதும் இல்லை.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.


தொடர்புடைய ஆக்கங்கள்:

தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள்!
தொழுகையை முறிக்கும் செயல்கள்!
இயற்கைத் தேவைகளை அடக்கிக் கொண்டு தொழலாமா?
தொழுகையின் போது காற்றுப் பிரிந்ததாக சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது?
கூட்டுத் தொழுகையின் அவசியமும், சிறப்பும்

Mar 17, 2009

முஸ்லிம்கள் இனி காங்கிரசை நம்பிப் பயனில்லை

கொள்ளைக்கார வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகி ஒருதாய் மக்கள் போல் வாழ்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் இன உணர்வுககு ஆளாகியதன் பலனாக நமது தாய்த்திரு நாடு இரண்டாகி பின்னர் மூன்று துண்டுகளாகியது. 1947-ல் இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தானாக உருவெடுத்தது. அன்று பாகிஸ்தான் முஸ்லிம்களுக்குரிய நாடு என்றானபோது எஞ்சியுள்ள நாடு இந்துக்குளுக்குரிய நாடு என உருவெடுக்க வேண்டும் என்பதே இந்துத்துவா காவி மனம் படைத்தவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் இந்துத்துவாவினர் இலைமறை காயாகத்தான் இருந்தனர்.

காந்தி, நேரு போன்ற நலநிலை உள்ளங்கொண்டோர்களின் ஆளுமை காங்கிரஸில் மிகைத்திருந்ததால் இந்திய நாடு மதச் சார்பற்ற நாடாக முகிழ்ந்தது. இந்துத்துவாவினரின் ஆதிக்கம் காங்கிரஸில் அப்போது செல்லுபடியாகவில்லை. ஆம்! நேரு, சாஸ்திரி, இந்திராகாந்தி போன்றோர் இந்தியத் திருநாட்டின் பிரதமர்களாக இருந்த காலகட்டங்களில் இந்துத்துவாவினரின் சதித்திட்டங்கள் பெரும் அளவில் நிறைவேறவில்லை. ஆனால் 1949-ல் நேரு பிரதமராக இருந்த காலத்தில் பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்பட்டது. சிலையை அகற்ற நேரு இட்ட கட்டளையை அன்றைய மாநில முதல்வர் நிறைவேற்றவில்லை. ஆயினும் நேரு, சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோர் பிரதமர்களாக இருக்கும் வரை மதசார்பற்ற நிலையும், இந்துத்துவாவிற்கு இடங்கொடா நிலையும் நீடித்து வந்தது.

இந்துத்துவாவினர் தங்களின் காவிக் கொள்கையை வளர்த்தெடுக்க பாபர் மசூதி வாய்ப்பளிப்பதாக அமைந்துவிட்டது. இன உணர்வு மிகைத்த முஸ்லிம்களும் அவர்களின் சதித்திட்டத்திற்குப் பலியாகி காவியின் வளர்ச்சிக்குத் துணை நின்றனர். அதனால் காவியினர் உ.பி. மாநில அரசைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்று 1992 டிசம்பர் 6-ல் காவி எண்ணங் கொண்ட நரசிம்மராவ நடுவண் அரசில் பிரதமராக இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர். அது மேலும் இந்து முஸ்லிம் பிளவை அதிகப் படுத்தியது. முஸ்லிம்களும் இன வெறிக்கு ஆளாகி இறைவனின் கட்டளைகள் 3:186, 41:34 இவற்றைப் புறக்கணித்துச் செயல்பட்டு, இந்துத்துவாவினர் வளர துணை புரிந்தனர். அதன் விளைவு காவியின் நடுவண் அரசையும் கைப்பற்றி, அரசின் முக்கிய பதவிகளில் (Keyposts) காவி மனங்கொண்டோர் அமர பாதை அமைத்துக் கொடுத்தனர்.

இப்படிப் படிப்படியாக இந்துத்துவாவினர் வளர்ந்து காங்கிரஸ் கட்சியினுள்ளும் அவர்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். அதனால்தான் மும்பைத் தாக்குதல்களிலும், கர்மவீரன் ஹேமந் கார்கரே, மற்றும் அவரது சகாக்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் இந்துத்துவாவினரின் கை இருக்கிறது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கும் நிலையில், அமெரிக்கா கொடுத்த ஆதாரங்கள் என்ற பெயரில் நடுவண் அரசு தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது. வீட்டினுள்ளேயே திருடனை வைத்துக் கொண்டு ஊர் முழுக்கத் திருடனைத் தேடுவதாக நாடகம் ஆடுகிறது. இது தீவிரவாதமும், பயங்கரவாதமும் மேலும் மேலும் வளர வழி வகுக்குமே அல்லாது அவை ஒழிய வழி வகுக்காது.

உலகிலேயே நம்பர் 1 பயங்கரவாதி புஷ்ஷும் அமெரிக்காவும் என்பதை பல அறிஞர்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். 1948-ல் பாலஸ்தீன மக்களிடமிருந்து பலாத்காரமாக அமெரிக்காவிலும், பிரிட்டனாலும் பிடுங்கிக் கொடுக்கப்பட்ட பகுதிதான் இஸ்ரேல் அதுவரை யூதர்களுக்கென்று சொந்த நாடு என்று ஒன்று இருக்கவில்லை என்பது உலகமறிந்த உண்மை. ஆனால் இன்றோ இஸ்ரேல் அமெரிக்காவின் கள்ளப் பிள்ளையாக செல்லப் பிள்ளையாக இருந்து வருகிறது.

அந்த இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக பாலஸ்தீனியர்கள் வாழும் காஸா பகுதிகளில் குண்டு மழை பொழிந்து அப்பாவி பச்சிளம் குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள் என பல ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து வருகிறது. குண்டு மழை பொழிவதை நிறுத்துமாறு ஐ.நா.சபையும் உலகின் பல நாடுகளும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும் இஸ்ரேல் அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்துவதாக இல்லை.

இஸ்ரேல் உலகின் பல நாடுகளையும் ஐ.நா.சபையையும் துச்சமாக மதித்து நடக்கக் காரணம் என்ன? அமெரிக்கா கொடுக்கும் துணிச்சல்தானே! ஐ.நா.சபையில் கடுமையான சட்டம் நிறைவேற்றி இஸ்ரேலை அடக்க முற்படும் போது அமெரிக்கா தனது “வீட்டோ” அதிகாரத்தால் தடுத்தால் அதன் பொருள் என்ன? இப்போதும், இதற்கு முன்னரும் பல்லாயிரம் பல அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்டு ரசிக்கும் பஷ்ஷைவிட அமெரிக்காவை விட பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் உலகில் வேறு எங்கும் இருக்க முடியுமா?

இந்தியா அணிசாரா நாடாக இருக்கும் போது, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் கொடுதது இந்தியா அமெரக்காவின் அடிமை நாடாக ஆகிவிட்டதாலும், அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் அரங்கேற்றி வரம் கொடுஞ்செயல்களுக்கு பாகிஸ்தான் முழுமையான ஒத்துழைப்பைத் தராததாலும், இந்தியாவைக் கொண்டு பாக்கிஸ்தானை மிரட்டி வருகிறது அமெரிக்கா.

அப்படிப்பட்ட அமெரிக்கா மும்பை பயங்கரத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் என்று அடையாளம் காட்டுவதை ஏற்று நடுவண் அரசு செயல்பட்டால் அதன் பொருள் என்ன? அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு நடுவண் அரசும் துணைபோகிறது என்று யாரும் சொன்னால் அதை நம்மால் மறுக்க முடியுமா?

அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானிம் ஈராககிலும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனரே! அப்போர்களை ஆரம்பிக்க புஷ் கூறிய காரணங்கள் அப்பட்டமான பொய்கள் என இன்று வெட்ட வெளிச்சமாகிவிட்டனவே! புலனாய்வுத்துறையினர் கொடுத்தத் தவறான தகவல்களை நம்பிச் செயல்பட்டுவிட்டேன் என்று இன்று புஷ் கூறுகிறாரே! அந்நாடுகளுக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான பொருள் நட்டத்தையும், லட்சக்கணக்கான உயிர் நட்டத்தையும் புஷ்ஷால் திரும்பித் தரமுடியுமா?

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மற்றும் பெண்டகன் தாக்கப்பட்டதும் புஷ்ஷின் சதியே என்று நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் இன்று அம்பலப்படுத்தி வருகிறார்கள். விமானத்தின் மூலம் அதிலிருந்த எரி பொருளைக் கொண்டு கட்டிடத்தை ஒருபோதும் தரைமட்டமாக்கி இருக்கமுடியாது. அந்த அளவு கடினமான உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கமுடியாது. பழைய கட்டிடங்களைத் தரைமட்டமாக்கும் பயங்கர குண்டுகள் கொண்டு மட்டுமே அந்த வலுவான கட்டிடத்தை தரைமட்டமாக்கி இருக்க முடியும் என்று பல ஆய்வாளர்கள் புஷ்ஷின் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

ஆம்! இப்படியொரு சதித்திட்டத்தை நிறைவேற்றிவிட்டு அப்பழியை பின்லேடன்மீது சுமத்தி அதைக் காரணம் காட்டி எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகள் மீது போர் தொடுத்து, அவற்றில் பொம்மை அரசுகளை ஏற்படுத்தி எண்ணெய் வளங்களை தன் கைவசப்படுத்திக் கொள்ளை அடிக்கலாம் என்பதே அமெரிக்காவின் திட்டம். அந்த திட்ட அடிப்படையிலேயே ஆஃப்கானிஸ்தான், ஈராக் தாக்குதல்கள், இப்போது அமெரிக்காவின் கழுகுப் பார்வை ஈரானின் பக்கம் திரும்பி இருக்கிறது.

இப்படிப்பட்ட கெட்ட எண்ணங்கள் கொண்ட நம்பர் 1 பயங்கரவாதி புஷ்ஷையும், அமெரிக்காவையும் நம்பி அமெரிக்கா கொடுக்கும் பொய்த் தகவல்களை உண்மைத் தகவல்களாக நம்பி நடுவண் அரசு செயல்பட்டால், அதன் பொருள் என்ன? அமெரிக்காவின் இரகசிய ஏஜண்டுகளான இந்துத்துவாவினரின் ஆதிக்கம் நடுவண் அரசில் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை என்று யாரும் சொன்னால் அதை நம்மால் மறுக்க முடியுமா?

எய்தவன் இருக்க அம்பை நோவது போல், மும்பை பயங்கரத்தின் சூத்திரதாரிகளை விட்டு விட்டு, பாக்கிஸ்தானில் பதுங்கிச் செயல்படும் அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகளைக்காட்டி பக்கத்து நாடான பாகிஸ்தானை மிரட்டி வருவது அறிவுடைமையான செயலா?

அமெரிக்காவின் கைப்பாவையாக நடுவண் அரசு செயல்பட்டால், அது காவிக் கட்சியினருக்குத் துணை போனதாகவே இருக்கும். அதன் விளைவு. நூற்றாண்டுகளுக்கு மேல் புகழ் பெற்ற பல ஒப்பற்றத் தலைவர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி கரைந்து நேற்று முறைத்த பா.ஜ.க.வில் ஐக்கியமாகும் நிலையே ஏற்படும்.

முஸ்லிம்கள் இனி காங்கிரசை நம்பிப் பயனில்லை. காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யும் என இனி எதிர்பாக்க முடியாது. முஸ்லிம்கள் இப்போது கண்டிப்பாகச் செய்ய வேண்டியது வடக்கே காஷ்மீரிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை அன்று பாகிஸ்தான் பிரிவினைக்காக ஒன்றுபட்டிருந்ததை விட மிக வீரியமாக இன்று ஓரணியில் ஒன்றுபட்டு ஒரே தலைமையில் செயல்பட முன்வருவதேயாகும். தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சுயநலம். அற்ப உலக ஆதாயங்கள், நீயா, நானா என்ற அகம்பாவத்தையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டல் நூல்-நெறி நூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து 3:102,103 கட்டளைப்படி முற்றிலுமாக இஸ்லாத்தில் நுழைந்து, குர்ஆனின் போதனைப்படி நடக்க முன்வந்தால் மட்டுமே இந்த பேராபத்திலிருந்து தப்ப முடியும். இல்லையென்றால் ஸ்பெயினை 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லாமல் துடைத்தெறியப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. முஸ்லிம்களே உஷார்! எதிர்கால உங்களது சந்ததிகள் உங்கள் மீது குற்றம் சுமத்தும் பரிதாப நிலைக்கு அளாகாதீர்கள். எதார்த்த் நிலையை உணர்ந்து உங்களது நிலையை மாற்றிக் கொள்ள முன்வாருங்கள்.

நீங்கள் நம்பி இருக்கும் அரசியல் தலைவர்களையும், மதகுருமார்களாக மதத் தலைவர்களை நம்பி ஏமாறாதீர்கள். மோசம் போகாதீர்கள். இவர்கள் அனைவரையும் விட மேலாக மிக விளக்கமாக, இரவும் பகலைப் போல் தெள்ளத் தெளிவாக மார்க்கத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் உலக மக்கள் அனைவருக்கும் விளக்கி இருக்கிறான். மேலும் தனது தூதரைக் கொண்டு மிகத்தெளிவாக நடைமுறைப்படுத்திக் காட்டச் செய்திருக்கிறான். அதற்கு மேலும் விளக்கம் தருவதாக இந்த மவ்லவிகள் வாதிட்டால் அவர்கள் அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரைவிட ஆற்றல் மிக்கவர்கள் என அகம்பாவத்துடன், ஆணவத்துடன் அபூ ஜஹீல் வாதத்தை வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து, அவர்களின் வலையில் சிக்காமல் அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புகளை நேரடியாகத் தன்னம்பிக்கையுடன் படித்து, அதன் கருத்துக்களை உள்வாங்கி அதன்படி நடக்க முஸ்லிம்கள் முன்வந்தால் மட்டுமே முஸ்லிம்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து நடப்பார்களாக.

Mar 15, 2009

இஸ்லாம் கூறும் அழகியகடன்


உலகில் வாழும் அன்றாடங்காச்சி முதல் அரசாட்சி செய்யும் ஆட்சியாளர்கள் வரை ஒவ்வொருவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டே வருகின்றனர். இவர்களின் கொடுக்கல்- வாங்கல்கள், கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மத்தியில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக பிளவை ஏற்ப்படுத்துவதையும், பிரச்சினைகள் ஏற்பட்டு கோர்ட் படியேறுவதையும், சில வேளைகளில் கொலையில் போய் முடிவதையும் பார்க்கிறோம்.இதற்கு அடிப்படை காரணம் கொடுக்கல்-வாங்கலில், இவர்கள் இஸ்லாமிய வழிமுறையை கடைபிடிப்பதில்லை. இறைவனை வணங்கும் விஷயத்திலிருந்து மனிதனின் அன்றாட வாழ்க்கை வரை வழிகாட்டும் வல்ல இறைவனின் மார்க்கம் இதற்கும் ஒரு அற்புதமான வழியை காட்டுகிறது.

முதலில் யாருக்கு கடன் கொடுக்கவேண்டும்;
நம்மிடத்தில் ஒருவர் கடன் கேட்கிறார் என்றால் கேட்டவுடன் தூக்கிக்கொடுத்துவிடக்கூடாது. அவர் எந்த விஷயத்திற்காக கடன் கேட்கிறார் என்பதை அறிய வேண்டும். கடன் கேட்பவர்களில் மூன்று சாரார் உண்டு.
* கல்வி-மருத்துவம்-உணவு, உடை, இருப்பிடம்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள்.
*மது- சூதாட்டம் போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்.
*ஊர் மெச்சவேண்டும் என்பதற்க்காக ஆடம்பர திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பெயர் சூட்டுவிழா, கந்தூரிவிழா இதுபோன்ற இன்னும் பல பித்அத்தான காரியங்களை செய்வதற்காக கடனுதவி கேட்பவர்கள்.
இவர்களில் முதல் சாரார் மட்டுமே நாம் கடன் வழங்க தகுதியானவர்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்;
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.5:2.
கடன் கொடுப்பவர்கள் கடைபிடிக்கவேண்டியவை;
இன்று கொடுக்கல்-வாங்கலில் பெரும்பாலும் நம்மவர்கள் எழுதி வைத்துக்கொள்வதில்லை.மேலும், கடன் கொடுக்கும்போது சாட்சிகளும் வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இதுதான். அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلاَ يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لاَ يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُواْ شَهِيدَيْنِ من رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاء أَن تَضِلَّ إْحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الأُخْرَى وَلاَ يَأْبَ الشُّهَدَاء إِذَا مَا دُعُواْ وَلاَ تَسْأَمُوْاْ أَن تَكْتُبُوْهُ صَغِيرًا أَو كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِندَ اللّهِ وَأَقْومُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلاَّ تَرْتَابُواْ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلاَّ تَكْتُبُوهَا وَأَشْهِدُوْاْ إِذَا تَبَايَعْتُمْ وَلاَ يُضَآرَّ كَاتِبٌ وَلاَ شَهِيدٌ وَإِن تَفْعَلُواْ فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَيُعَلِّمُكُمُ اللّهُ وَاللّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.2:282.
* தேவைப்படின் அடமான பொருளை வாங்கிக்கொண்டு கடன் கொடுத்தல் சிறந்தது;
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُواْ كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ تَكْتُمُواْ الشَّهَادَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.2:283.

மேலும்,ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள்.நூல்;புஹாரி,எண் 2513

கடன் கொடுத்தவர் கஷ்டத்தில் இருந்தால், கடனை பாதியாக குறைப்பது; அவகாசம் அளிப்பது; தள்ளுபடி செய்வது.
*பாதியை குறைத்தல்;
கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃப் இப்னு மாலிக்! கஃபே' என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே! என்றேன். 'பாதியைத் தள்ளுபடி செய்வீராக! என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி 'எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!" என்று நபி(ஸல்) கூறினார்கள். நூல்;புஹாரி,எண் 471

*அவகாசம் அளித்தல்[அல்லது]தள்ளுபடி செய்தல்;
அல்லாஹ் கூறுகின்றான்;

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُواْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.2:280.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி,எண் 2391

கடனை அதிகாரமாக கேட்பதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு;
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு" என்று கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி,எண் 2401
கடன் வாங்கியவர்களின் கடமைகள்;
நம்மில் பெரும்பாலோர் கடன் வாங்கும்போது அதை திரும்பச்செலுத்தும் எண்ணத்துடன் வாங்குவதில்லை. 'அல்வா' கொடுக்கும்நோக்கத்தோடு கடன் வாங்குபவர்களும் உண்டு. ஆனால் ஒரு உண்மையான முஸ்லீம் கடனை திரும்பச்செலுத்தும் நோக்கத்துடனே கடன் வாங்கவேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.நூல்;புஹாரி,எண் 2387

வாங்கிய கடனை விரைவாக திருப்பி செலுத்துதல்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். நூல்;புஹாரி,எண் 2400

கடனாளிக்கு தொழுகை நடத்த மறுத்த நபி[ஸல்] அவர்கள்.
தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை!" என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்!" என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!" என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!" என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்;புஹாரி,எண் 2295
கடனிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு தேடல்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். நூல்; புஹாரி,எண் 2397

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை கடன் வாங்குவதிலிருந்து பாதுகாத்து, இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ அருள்புரிவானாக!

Mar 14, 2009

நபிமொழி

மூன்றாம் நபரை விடுத்து இருவர் மட்டும் ரகசியம் பேசுவது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்: "இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது". (அல்குர்ஆன்).
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''மூன்று பேர்கள் இருந்தால், மூன்றாம் நபரை விடுத்து இரண்டு பேர்கள் இரகசியம் பேச வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்).
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நீங்கள் மூவராக இருந்தால் ஒருவரை மட்டும் விட்டு விட்டு, இருவர் ரகசியம் பேச வேண்டாம். ஆனால் மக்களோடு சேர்ந்திருந்தாலே தவிர. இது அவரை கவலைப்படச் செய்யும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்), (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1599)
அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''பூனையை அது இறந்து போகும் வரை சிறை வைத்த பெண்ணொருத்தி வேதனை செய்யப்படுகிறாள். இது விஷயமாக நரகிலும் வீழ்கிறாள். அதை அவள் அடைத்து வைத்திருந்த போது அவள் அதற்கு உணவளிக்கவும் இல்லை. அதை நீர் அருந்தச் செய்யவும் இல்லை. மேலும் பூமியின் புழு பூச்சிகளை அது உண்பதற்கும் அவள் அதை வெளியே விடவும் இல்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''கால்நடைகளுக்கு எதுவும் கொடுக்காமல் கட்டிப் போடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வசதி உள்ளவர் (கடனை திருப்பி அளிப்பதில்) தாமதம் செய்வது அநீதமாகும். உங்களில் ஒருவர் கடனை நிறைவேற்ற ஒப்படைக்கப்பட்டால், அவர் (அதை) நிறைவேற்றட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''தன் அன்பளிப்பைத் திரும்ப வாங்குபவன், தன் வாந்தியை தானே உண்ணும் நாயைப் போன்றவன்.'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1612

கவலையின் போது ஓதும் துஆ



اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأْلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوْ اِسْتَاْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيْمَ رَبِيْعَ قَلْبِيْ ، وَنُوْرَ صَدْرِيْ ، وَجَلاَءَ حُزْنِيْ وَذِهَابَ هَمِّيْ وَغَمِّيْ

(அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாஸியத்தீ பி எதிக, மாழின் ஃபிய்ய ஹுக்முக, அதுலுன் ஃபிய்ய கலாவுக, அஸ்அலுக பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹீ நஃப்ஸக, அவ் அன்ஸல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவிஸ்தஃதர்த்த பிஹீ ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அளீம ரபீஅ கல்பீ, வ நூர சதுரீ, வஜலாஹ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ வகம்மீ)
பொருள்: யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண், ஒரு பெண்ணின் மகனாவேன். எனது குடும்பி உனது கையிலே இருக்கிறது. என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதிமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய். (அவை அனைத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.) அல்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத்தின் ஒளியாக்குவாயாக! எனது துயரத்தை நீக்கக்கூடியதாகவும் எனது கவலையை மறைக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக!

தண்ணீரில் உயிர்வாழும் மீன்கள் ஓர் அற்புதம்


தற்காலம் இவ்வுலகில் உள்ள மீன்களும், முந்தைய காலத்தில் வாழ்ந்த மீன்களும் ஒரே அமைப்பில்தான் இருக்கின்றன என்பதை இந்தப் படங்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

தண்ணீரில் வாழும் மீன்கள் விரைவாகவும், சுறுசுறுப்பாகவும் நீந்துவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். மீன்கள் நீந்துவதற்காக அவைகள் தங்களது வாலை பக்கவாட்டில் அசைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இத்தனை எளிதாக மீன்கள் நீந்துவதற்கு படைப்பாளன் அல்லாஹ், மீன்களுக்கு வழங்கியிருக்கும் விரைவாக அசையக்கூடிய முதுகெலும்பிற்காகவும், அவைகளில் உடலில் அவைகள் பெற்றிருக்கும் மற்றுமுள்ள அமைப்புகளுக்காகவும் அவைகள் வல்லோன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

மீன்கள் தண்ணீரில் நீந்தும்போது அதிகமான சக்தியை இழக்கிறது. இவ்வாறு மீன்கள் அதிகமான சக்தியை இழப்பது, நாள் முழுவதும் தண்ணீரில் நீந்துவதால் அல்ல. அவைகள் தண்ணீரில் ஒரே இடத்தில் நிற்காமல் இருக்க வேண்டுமெனில் மிக வேகமாக நீந்தியே ஆக வேண்டும். அத்தோடு மீன்களை உணவாக உட்கொள்ளும் மற்ற நீர்வாழ் உயிரினங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், மீன்கள் மிக வேகமாக நீந்துவது அவசியமாகிறது.
மேலும், அதிகமான நேரங்களில் மீன்கள் எதிர் நீரோட்டத்தில் நீந்துகின்றன. தண்ணீரில் வேகமாக நீந்துவது எத்தனை கடினமானது, அதே வேளையில் தெருவில் நடந்து செல்வது எத்தனை எளிதானது என்று எண்ணிப் பாருங்கள். நிலத்தில் உயிர் வாழ்வதையும், தண்ணீரில் உயிர்வாழ்வதையும் ஒப்பிட்டு பார்த்தால் புரியும் தண்ணீரில் வாழ்வது எத்தனை கடினமானது என்று.

இவ்வாறு மீன்கள் தண்ணீரில் நீந்துவதற்கு உரிய சக்தியை கொடுப்பது, மீன்கள் தங்கள் முதுகெலும்பிலும், தசையிலும் கொண்டிருக்கும் பிரத்யேக அமைப்பாகும். மீனின் முதுகெலும்பில் துடுப்புகளும் தசைகளும் இணைக்கப்பட்டிருப்பதோடு, மீனின் உடலை நேராக வைத்திருக்க பயன்படுவதும் முதுகெலும்பாகும். முதுகெலும்பு இல்லையெனில், மீன்களால் தண்ணீரில் நீந்திச் செல்ல முடியாது. மேலும் மீன்கள் தண்ணீரின் முன்னும், பின்னும் மாத்திரம் நீந்துவதில்லை. மீன்கள் தண்ணீரில் அடிப்பகுதிக்கும், மேற்பரப்பிற்கும் நீந்த வேண்டும். இவ்வாறு மீன்கள் தண்ணீரின் அடிப்பகுதிக்கும், மேற்பகுதிக்கும் நீந்துவதற்கு அவைகளுக்கு முதுகெலும்பின் பிரத்யேக அமைப்பு மாத்திரம் போதாது. இதற்காக அவைகளின் உடலில் வேறொரு அமைப்பும் அவசியமாகிறது. அந்த அமைப்பையும் வல்ல அல்லாஹ் மீன்களுக்கு வழங்கியிருக்கிறான்.

மீன்களின் உடலில் காற்றுப்பைகள் உள்ளன. இந்த காற்றுப்பைகளில் உள்ள காற்றை வெளியேற்றுவதால், மீன்கள் தண்ணீரின் அடிப்பகுதிக்கு செல்லவும், மேலும் காற்றுப்பையை நிரப்பிக் கொள்வதால் மீண்டும் மீன்கள் தண்ணீரின் மேற்பகுதிக்கு வரவும் வசதியாக இருக்கிறது.

மீன்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தண்ணீரிலேயே இருந்தாலும், தண்ணீரால் அவைகள் எப்படி பாதிப்படையாமல் இருக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?. மனிதர்களாகிய நாம் சில மணி நேரங்கள் தண்ணீரில் இருந்தால் நமது தோல்கள் பாதிப்படைவதை காண்கிறோம். இன்னும் சற்று அதிகமான நேரம் நாம் தண்ணீரில் இருந்தால் நமது தோல்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவதை நாம் உணர்கிறோம். ஆனால் இந்த நிலை மீன்களுக்கு ஒருபோதும் ஏற்படுவதில்லை. ஏனெனில் மீன்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் கடினமான செதில்கள். இந்த செதில்கள் மீனின் தோல்களின் மேற்பகுதியில் அமைந்துள்ளன. மீன்களின் உடலினுள் தண்ணீர் கசிந்து விடாமல் தடுப்பது இந்த செதில்களின் வேலையாகும். மீன்களுக்கு செதில்கள் இல்லையெனில், மீன்களின் உடலும் தண்ணீரினால் பாதிக்கப்படும். மீன்களின் உடலினுள் தண்ணீர் கசிய ஆரம்பித்தால், மீன்கள் நீந்தமுடியாமல் நிலை தடுமாறும். இதன் காரணமாக மீன்கள் மரணமடையவும் நேரிடலாம். இருப்பினும் மீன்கள் தண்ணீரின் எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல், தங்களது வாழ்க்கையை தண்ணீரிலேயே தொடர்கின்றன.

நீரில் வாழும் அனைத்து மீனினங்களும் மேற்குறிப்பிட்ட வசதிகளை கொண்டிருக்கின்றன. நீண்ட காலங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த மீனினங்களும் மேற்குறிப்பிட்ட அதே அமைப்பினை கொண்டிருந்தன. லட்சக்கணக்கான வருடங்களான மீன்கள் அதே வடிவமைப்பில்தான் இருக்கின்றன. இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அதன் உடலமைப்பில் எந்த பரிணாம மாற்றமும் இல்லை. இதனை லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த மீன்களின் எஞ்சிய மிச்சங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். உலகம் தோன்றிய நாள் முதலே மீனும் இவ்வுலகில் இருக்கிறது என்பதற்கு இது ஆதாரமாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் மற்ற உயிரினங்களை படைத்தது போல் அல்லாஹ் மீனினங்களையும் இவ்வுலகத்தைப் படைக்கும்போதே படைத்திருக்கிறான். எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே அவைகளுக்குத் தேவையான எல்லா அமைப்புகளையும் வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று மீன்களும் வல்ல அல்லாஹ் இட்ட கட்டளைப்படி - அவனது படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
'நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன்தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ், தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன்மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா -
164வது வசனம்).

நன்றி:satyamargam

நபிமொழி

நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு நாள் காலை தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பேரீத்தம் மரத்தின் கீற்றில் அவன் ஒளிந்து இருக்கலாம் என நாங்கள் எண்ணும் அளவுக்கு அவனைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறினார்கள். அவர்களிடம் நாங்கள் மாலை நேரத்தில் சென்ற போது, எங்களைப்பற்றி அவர்கள் புரிந்து கொண்டு, ''உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார்கள் ''இறைத்தூதர் அவர்களே! காலையில் தஜ்ஜாலைப் பற்றி நீங்கள் கூறினீர்கள். அவன் பேரீத்தம் மரக் கீற்றில் மறைந்து இருப்பானோ என அவனை நாங்கள் எண்ணும் அளவுக்கு நீங்கள் தெளிவாகக் கூறினீர்கள்'' என்று கூறினோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''தஜ்ஜாலை விட மற்ற விஷயங்களே, உங்களிடம் என்னை மிகவும் பயப்படச் செய்கிறது.
உங்களிடையே நான் இருக்கும் போது, அவன் வெளியேறினால் நான் உங்களுக்காக அவனிடம் போரிடுவேன். உங்களிடையே நான் இல்லாத போது அவன் வந்தால் ஒவ்வொருவரும் அவனுக்கு எதிரியே. அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனக்குப் பின் பாதுகாப்பாளனாக உள்ளான். நிச்சயமாக அவன் குட்டை முடி உள்ள வாலிபன். அவனது கண் பிதுங்கி நிற்கும். அப்துல் உஸ்ஸா இப்னு கதன் என்பவர் போல் அவன் இருப்பான் எனக் கருதுகிறேன். உங்களில் ஒருவர் அவனைச் சந்தித்தால் ''கஹ்பு'' அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை அவர் ஓதட்டும்! அவன் சிரியா, மற்றும் ஈராக்கிடையே உள்ள பகுதியிலிருந்து வெளியேறுவான். வலது புறத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவான். இடது புறத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் அப்போது உறுதியாக இருங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! பூமியில் அவன் தங்கி இருக்கும் காலம் எவ்வளவு?'' என்று கேட்டோம். ''நாற்பது நாள். ஒரு நாள் ஒரு வருடம் போல் இருக்கும். மற்றொரு நாள் ஒரு மாதம் போல் இருக்கும். மற்றொரு நாள் ஒரு வாரம் போல் இருக்கும மற்றவை, உங்களின் சாதாரண நாட்கள் போல்தான்'' என்று கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! ஒரு வருடம் போல் உள்ள அந்த நாளில், ஒரு நாளுக்குரிய தொழுகை (தொழுதால்) நமக்கு போதுமா?'' என்று கேட்டோம். ''இல்லை. அந்த நாளில் அதன் நேரத்தை நீங்கள் கணக்கிட்டு (தொழுது) கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
''இறைத்தூதர் அவர்களே! பூமியில் அவனின் வேகம் எவ்வளவு?'' என்று கேட்டோம். ''காற்றுத் தள்ளிச் செல்லும் மேகம் போல் (வேகம்) இருக்கும்'' என்று கூறிய நபி(ஸல்)அவர்கள், அவன் மக்களிடம் வருவான், அவர்களை (அவன் வழிக்கு) அழைப்பான். அவனை நம்புவார்கள். அவன் கூறுவதை ஏற்பார்கள். வானத்திற்கு அவன் கட்டளையிடுவான். அது மழை பொழியும். பூமிக்கு கட்டளையிடுவான். அது தாவரங்களை முளைக்கச் செய்யும். அவர்களின் கால் நடைகள் நீண்ட கொம்புகளுடன் பால் மடு கனத்து, வயிறு நிறைந்து மாலையில் அவர்களிடம் திரும்பும். பின்பு மற்றொரு கூட்டத்தாரிடம் வருவான். அவர்களை (தன் வழிக்கு) அழைப்பான். அவனது கருத்தை ஏற்க மாட்டார்கள். அவர்களை விட்டும் அவன் சென்று விடுவான். அவர்கள் தங்கள் சொத்துக்கள் எதுவும் தங்கள் கையில் இல்லாத அளவுக்கு பஞ்சம் பீடிக்கப்பட்டவர்களாக ஆகி விடுவார்கள். பின்பு வறண்ட காட்டுக்குச் செல்வான். அதனிடம் ''உன் புதையல்களை நீ வெளிப்படுத்து'' என்று கூறுவான். பெரிய தேனீயை சிறிய தேனீக்கள் சூழ்வது போல் புதையல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளும். பின்பு ஒரு வலிமையான வாலிபனை அவன் அழைப்பான். அவனை தன் வாளால் வெட்டுவான். ஒரே வெட்டில் இரண்டு கூறாக அவனை பிளப்பான். பின்பு (இறந்த) இளைஞனை அழைப்பான். உடனே அவன் சிரித்த முகத்துடன் எழுந்து வருவான். இது போன்ற நிலையில்தான் அல்லாஹ் மஸீஹ் இப்னு மர்யம் (எனும் ஈஸா) நபியை அனுப்புவான். திமிஷ்க் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாராவில் வண்ண ஆடை அணிந்தவர்களாக, இரண்டு வானவர்களின் இறக்கைகளில் தங்கள் கைகளை வைத்தவர்களாக இறங்குவார்கள். தன் தலையை அவர்கள் சாய்த்தால், வேர்வை கொட்டும். அதை அவர்கள் உயர்த்தினால், முத்துக்கள் போல் அந்த வேர்வை பிரகாசிக்கும். அவர்களின் மூச்சுக் காற்றை நுகரும் எந்த இறை மறுப்பாளரும் இறக்காமல் இருப்பதில்லை. அவர்களின் மூச்சுக்காற்று, அவர்களின் பார்வை படும் தூர அளவுக்கு சென்றடையும். ஈஸா நபி, தஜ்ஜாலைத் தேடுவார்கள். இறுதியில் பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள '' லூத்'' என்ற இடத்தில் பிடித்து, அவனை கொல்வார்கள்....