Aug 11, 2010

ஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு

ஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்

அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

அல்லாஹ்வின் அருளைப்பெற சிந்திப்பீர் செயல்படுவீர்

இன்று வியாழக்கிழமை (20.8.2009) 1430 ஷஃபான் 28 வது திகதியா? அல்லது 1430 ஷஃபான் 29 வது திகதியா?

கணக்கை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவர்கள் இன்று 28 ம் திகதியில் இருக்கிறோமா? அல்லது 29 ம் திகதியில் இருக்கிறோமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் 1430 ரஜப் மாதம் எப்படி முடிவடைந்தது என்பதை பற்றி அறியாத நிலையிலேயே ஷஃபான் மாதத்தை அடைந்தார்கள்.

அவர்களின் சிந்தனைக்கு ஒரு சில விபரங்கள்

வருடத்தில் குறைந்தது இரண்டு சூரிய கிரகணங்களும், சந்திர கிரகணங்களும் நடைபெறுவதை நம்மில் பலர் அறியாமல் இருக்கிறார்கள்.

1430 ரஜப் மாதம் புதன்கிழமையுடன் (22.07.2009) அன்றுடன் 30 நாட்களை நிறைவு செய்து முடிவடைந்தது.
அன்றுதான் ரஜப் மாதம் முடிவடைந்தது என்பதற்கு அத்தாட்சியாக அன்று சூரிய கிரகணம் நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம். சூரிய கிரகணம் மாதத்தின் கடைசி தினத்தில் தான் நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அதை தொடர்ந்து 1430 ஷஃபான் மாதம் (23.07.2009) வியாழக்கிழமை துவங்கியது. இதே ஷஃபான் மாதத்தின் வியாழன்கிழமை 15வது (06.8.2009) நாளில் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதிலிருந்து நாம் தெளிவாக ஒரு விஷயத்தை புரியலாம்.

சந்திர கிரகணம் பெளர்ணமி (FULL MOON DAY) தினத்தில் தான் எற்படும். அது 15 வது தினத்ததில் ஏற்பட்டதனால் அன்றைய தினத்தில் இருந்து 1430 ஷஃபான் மாதம் முடிவடைய 14 நாட்களோ அல்லது 15 நாட்களோ தான் இருக்க முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது உலகில் அதுவும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள நாட்காட்டியில் இன்று ஷஃபான் 28 என உள்ளது. இதிலிருந்தே அந்த நாட்காட்டியும், அதை பின்பற்றி ஷஃபான் 29 நாளை தீர்மானிப்பவர்கள் அனைவரும் தவறான திகதியை பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

மேலும் 1430 வியாழக்கிழமை (20.08.2009) ஷஃபான் 29 வது நாள் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வந்து புதிய சுற்றை ஆரம்பித்து விட்டதை அறிவியல் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்து விட்டது. அதை அனைத்து அறிவியலாளர்களும் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்.

எனவே திருக்குர்ஆனின் 10:5 வது வசனத்தின் அடிப்படையில் பல வருடங்களின் கணக்கை அறிய முழு வாய்ப்பையும் அல்லாஹ் நமக்கு இன்று ஏற்படுத்தி தந்துவிட்டான். எனவே நாளை வெள்ளிக்கிழமை 1430 வருடத்தின் ரமளான் மாதத்தின் முதல் நாள் (21.08.2009)என்பது சந்தேகதத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது.

ஆகவே விருப்பு வெருப்பின்றி அல்லாஹ்வின் அருளை பெறவதற்காகவே மட்டும் நாம் நாளை வெள்ளிக்கிழமை நோன்புடன் ரமளான் மாதத்தை ஆரம்பிப்போம்

சஹர் பாங்கு: நபிவழியை நடைமுறைப்படுத்துங்கள்

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால்,ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.

பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

‘பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 621

‘பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி,5299.7247 முஸ்லிம், நஸயீ.

மேற்கண்ட நபிமொழியை நடைமுறைப் படுத்தும் முகமாக அனைத்தப் பள்ளிவாசல்களிலும் சஹர் நேரத்தில் பாங்கு சொல்லி நபிவழியை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்

thaks.tntj wesite.

Jul 26, 2010

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடரும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த ஆண்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மருத்துவம், பொறியியல், தொழில் படிப்புகளிலும் வேலைவாய்ப்பிலும் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 69 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், அருந்ததியினர், இஸ்லாமியர் என சதவீத வாரியாக பிரித்து தரப்படுகிறது.

இந்நிலையில், தொழில் கல்வியில் குறிப்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1994ல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கும். இடைக்கால உத்தரவில், சம்பந்தப்பட்ட ஆண்டில் மாநில அரசு அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டை தொடரலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர்குமார் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு அரசியலமைப்பு சட்ட வழக்காக விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் பின்தங்கிய மக்கள் உள்ளனரா என்பதற்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் தமிழக அரசு கொடு¢க்க வேண்டும்.

அரசு தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என்று மண்டல் கமிஷன் வழக்கில் விலக்கு அளிக்கப்பட்டதை, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கலாம். அதுவரை, தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும். இந்த உத்தரவோடு இந்த வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

தினகரன்-14-7-2010